Tuesday 31 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 26

Rate this posting:
{[['']]}
இருப்புக் குழி 

திடீர்னு மனசுக்குள்ள இருப்புக் குழிங்குற வார்த்தை வந்து உக்காந்துட்டு ரொம்ப அவஸ்தைப்படுத்துதுஇந்த வார்த்தை ஏன் இந்த நேரம் என் மனசுல தோணிச்சுன்னு எனக்கு புரியவே இல்லஆனா இதுக்கப்புறம் எனக்கு தாத்தா நியாபகம் வந்துடுச்சு.

 தாத்தாவோட புகைப்படம் பாட்டி வீட்ல இருக்கும்அந்த போட்டோவுல தாத்தா நீளமா தலைமுடிய வளத்து விட்ருப்பார்கிட்டத்தட்ட அவர் முகத்துல பாகவதர் சாயல் தெரியும்அவரோட கண்ணு புன்னகைக்கும்அதுல ஒரு ஒளி தெரியும்.

தாத்தாவ பத்தின அவரோட பிம்பம் இவ்வளவு தான் எனக்கு தெரியும்ஆனாலும் இருப்புக் குழியை கேட்டதும் தாத்தா பத்தின நியாபகங்கள் ஒரு ஊதுபத்தில இருந்து கிளம்பின புகை மாதிரி மனசுல இருந்து வெளிவர ஆரம்பிக்குது
.
அன்னிக்கி அந்த வீடு அப்படி தான் இருந்துச்சுவீடுன்னு சொல்றத விட அது தாத்தாவோட மாளிகைநிலா முற்றம்நிலவறைஅடுப்பங்கரைஅரங்கு வீடு,அந்தப்புரம்னு தாத்தா வீட்டுல நாள் முழுக்க ஒளிஞ்சு விளையாடலாம்அப்படி அன்னிக்கும் ஒளிஞ்சு விளையாடலாம்னு பாத்தா வீடு முழுக்க ஆட்கள்.அதுவும் பெண்கள் கூட்டம் ரொம்ப அதிகம்தாத்தாவ மங்களா வீட்ல (ஹால்சம்படம் போட்டு உக்காத்தி வச்சிருந்தாங்கதாத்தா தலைல பெரிய கட்டு.அவர் முகமே தெரியாத அளவு நாமம் பூசி இருந்துச்சுஅறை முழுக்க நிறைஞ்சி நின்ன ஊதுபத்தி மணம்.

என் பக்கத்துல வந்து உக்காந்த கண்ணன் மாமா என் கைய அழுத்த பிடிச்சுட்டு “நம்ம அப்பாவுக்கு என்னடி ஆச்சு”ன்னு கேட்டுட்டு இருந்தார். என்னை விட நாலு வயசு அதிகம் மாமாவுக்கு. தாத்தாவோட பனிரெண்டு புள்ளைங்கள்ல அம்மா ரெண்டாவது. இவர் கடைக்குட்டி. மாமாகிட்ட எனக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியல. தாத்தாவுக்கு என்னமோ ஆகிடுச்சுன்னு மட்டும் ரெண்டு பேருக்கும் நல்லாவே புரிஞ்சுதுதாத்தா இனி வர மாட்டார்செத்துப் போய்ட்டார்ன்னு புரிபட மனசு விரும்பவே இல்லதிடீர்னு எனக்கு அம்மாகிட்ட போகணும்னு தோணிச்சுஅம்மா எங்கன்னு எட்டிப் பாத்தேன்அம்மா தாத்தா கால் விரல பிடிச்சு வருடிட்டு இருந்தா.

எங்கப்பா செத்துப் போய்டனும்னு அம்மா முந்தின நாள் ராத்திரி அப்பாகிட்ட சொல்லிட்டு இருந்தது நியாபகம் வந்துச்சுஅம்மா ஏன் அப்படி சொன்னா?இந்த அம்மாவுக்கு கிறுக்கு பிடிச்சிருக்குன்னு அப்ப நினைச்சுகிட்டேன்காலைல கூட தாத்தா வீட்டுக்கு கிளம்பி வர்றதுக்கு முன்னாடி கோழி கறி அடுப்புல கொதிச்சுட்டு இருந்ததுஎப்ப கோழி கறி சாப்பிடப் வீட்டுக்கு போகலாம்னு அம்மா கிட்ட கேக்க நினச்சேன்அப்புறமா என்னவோ தயக்கத்துல வேணாம்னு எச்சில முளுங்கிகிட்டேன்.

அடிக்கடி தாத்தா வீட்டுக்கு வரும் நீல சீலை பாம்பட பாட்டி தான் ஏ என்ன பெத்த ராசா போய்டியாஊருக்கே படியளப்பியேஇனி உன்ன எங்கப் போயி பாக்கப் போறோம்னு பலவிதமா ஒப்பாரி வச்சுட்டு இருந்தாங்கசுத்தி நின்னவங்க எல்லாம் அத கேட்டு இன்னும் அதிகமா அழ ஆரம்பிச்சிருந்தாங்கஅந்த இடமே ஓலத்தாலயும் ஒப்பாரியினாலயும் நிறைஞ்சி இருந்துச்சு.

அத்தன பொம்பள கூட்டத்துலயும் தாத்தா தலைமாட்டுல முருகேசன் மாமா அடிக்கடி வந்து நின்னுட்டு நின்னுட்டு போயிட்டு இருந்தார்அவர் முகத்த பாக்க எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சுஎத்தனையோ நாள் அவர் கூட நான் விளையாடி இருக்கேன்னாலும் அந்த நேரம்... அந்த முகம்... அதுல ஒரு விகாரம் இருந்ததா தோணிச்சுஒரு பேரழுகை வந்து அத எப்படியாவது அடக்கியே ஆகணும்னு துடிக்குற ஒரு ஆணோட முகம் அது.

ஆஸ்பத்திரில இருக்குறச்ச முருகேசன் தான் அப்பாவ பாத்துகிட்டான்சோறு தின்னுகிட்டே இருப்பான்அப்பா முருகேசான்னு ஒரு வார்த்த கூப்டா போதும்,எச்சிக் கையோடவே ஓடி வந்து மோள் பிடிப்பான்கோப்பைய எடுத்து வச்சு அசிங்கம்னு பாக்காம எல்லாம் செய்வான்பெத்தப் பிள்ளைங்க நாங்க இப்படி செய்ததில்ல பாத்துக்க” அம்மா வேறொரு நாள் மாமிகிட்ட அவர பத்தி சொன்ன நியாபகம்முருகேசன் மாமா தான் எங்க எல்லாருக்கும் முடி வெட்டி விடுறவர்அது ஏனோ தெரியல எப்பவும் கக்கத்துல ஒரு தோல் பைய இடுக்கிகிட்டு பண்ணையாரே பண்ணையாரேன்னு தாத்தாவையே சுத்தி சுத்தி வருவார்.

மங்களா வீட்டுக்குள்ள பொம்பளைங்க லாந்த கூடாதுன்னு அம்மா சொல்லுவாபாட்டிக்கு மட்டும் அங்க ஒரு தேக்குமர கட்டில் உண்டுஆஜானுபாகுவா பாட்டி அதுல கைக்கு முட்டுக்குடுத்து படுத்து கெடந்தா ஒரு ஆனை சீலை கெட்டிக்கிட்டு படுத்துக் கெடந்த மாதிரி இருக்கும்பாட்டி சீலைக்கு ஒரு தனி மணம் உண்டுஅப்படியே அதுல மூஞ்சிய பொதச்சுச்கிடா ஜம்முன்னு ஒரு கிறக்கம் வரும்அடுத்த வினாடி கொறட்டை விட்ருவேன் நானெல்லாம்.

கடைசி வரைக்கும் பாட்டி அந்த நேரம் எங்க இருந்தாங்கன்னு நியாபகமே இல்லஒரு வேள அரங்கு வீட்டுக்குள்ள இருந்து விசும்பிகிட்டு இருந்துருக்கலாம்.ஏன்னா அங்க தான் எந்த விளக்கும் ஏற்றப்படாம கும்மிருட்டா இருந்துச்சுஇப்படி தான் மூத்த மாமாவுக்கு குறைப்பிரசவத்துல பையன் பொறந்தப்ப புள்ள செத்துட்டா தேவலன்னு பெத்தவங்க முதல் கொண்டு எல்லாரும் பேசஅவன அரங்கு வீட்டுக்குள்ள வெளிச்சம் படாம தொண்ணூறு நாள் நெஞ்சுல அணைச்சுக்கிட்டு அடைக்காத்து மீட்டெடுத்தது பாட்டி தான்பின்னொரு நாள் திடீர்னு அவன் செத்துப்போனப்ப இப்படி தான் பாட்டி அரங்கு வீட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம அழுதுட்டு இருந்தாங்கஅதிசயத்துலயும் அதிசயமா அம்மான்னு பாட்டிய வாய் தொறந்து கூப்ட்டுட்டு செத்துப் போயிருந்தான் அவன்.அவனையும் தாத்தாவோட இருப்பு குழிக்கு பக்கத்துலயே அடக்கம் பண்ணினாங்க.

நியாபகங்கள் திசை மாறிப் போகுதுலஆனா எனக்கென்னவோ எல்லாமே ஒண்ணுக்கொண்ணு தொடர்புடையதாவே தோணுது.

திடீர்னு காளை பூட்டின தாத்தாவோட வில் வண்டிங்க நியாபகத்துக்கு வருதுகாளைங்களோட கொம்புல எல்லாம் கலர்கலரா பெயின்ட் அடிச்சு வச்சிருக்கும்.மாட்டு சக்கரத்துல கால் வச்சு மாட்டுவண்டிக்குள்ள ஏற முடியாம என் வயசு புள்ளைங்க எல்லாம் தத்தளிச்சுட்டு இருக்குறப்ப ஒத்த கால வச்சுகிட்டு சல்லுன்னு உள்ள ஏறி உக்காந்துருவேன். “ஏம் புள்ளைக்கு என்னத்துக்குலே காலுஅவ சக்கரத்த கட்டிகிட்டு உலகம் முழுக்க சுத்தி வந்துருவான்னு சொல்ற தாத்தா குரல் கூட இந்தா என் காதுல கேட்டுகிட்டே இருக்கு.

அப்பலாம் லாலி” தான் எங்களுக்கு ஆல் இன் ஆல். இருபது வயசுல விடியக்காலைல தாத்தா சந்தைக்கு காய்கறி லோடு இறக்க போயிருந்தப்ப லாரியோட வந்து இறங்கினவராம் இந்த லாலி”. அப்ப அவருக்கு பத்து வயசுக்கும் குறைவா தான் இருக்குமாம்ஆள் யார்என்னன்னு விசாரிக்கவும் முடியலஎது கேட்டாலும் பே பே” தான்இவன இப்படியே தொரத்தி விட முடியாதுன்னு வீட்டோட கொண்டு வந்துட்டார் தாத்தாசூடடிக்குற வெட்டைல நெல்லு பொடச்சுட்டு இருந்த யாரோ ஒரு கிழவி தான் லாலி லாலின்னு அவர கூப்பிடஅப்புறம் அதுவே அவர் பெயராகிடுச்சுகிட்டத்தட்ட அறுபது வருஷம் லாலி எங்க குடும்பத்துல ஒருத்தரா வலம் வந்துட்டு இருந்தார். அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாட்டி நிறைய தடவ முயற்சி பண்ணியும் ப்ரம்மச்சாரியாவே போய் சேர்ந்துட்டார்.

தாத்தாவுக்கு இருப்பு குழி வெட்டுறப்ப நான் லாலி தோள் மேல உக்காந்துட்டு இருந்தேன்ஒரு முழங்கால் அளவு தோண்டினதுமே தண்ணினா தண்ணி அப்படி ஒரு தண்ணிகுழி வெட்ட முடியாது போலருக்கேன்னு ஆளாளுக்கு தெகச்சி நின்னாங்க. அப்புறமா ரெண்டாவது மாமா தான் போய் ஒரு மண்ணெண்ன மோட்டார வாடகைக்கு எடுத்துட்டு வந்தாங்க. மோட்டார் போட்டு இறைச்சாலும் தண்ணி நின்னப் பாடில. முதல்ல நேரா குழிய வெட்டி, ஊறி வந்துட்டு இருந்த தண்ணிய சிமென்ட் போட்டு அடச்சு, அதுக்கப்புறமா பக்கவாட்டுல சதுரமா இருப்புக் குழிய வெட்டுனாங்க.

“இதெதுக்கு இப்படி வித்யாசமா ஒரு குழி”ன்னு மாமா கிட்ட கேட்டேன். “தாத்தா மேல யாரும் மிதிச்சுடக் கூடாதுல அதுக்குதான்”னு மாமா சொன்னார். லாலி இருப்புக் குழிய கைகாட்டி “ப்பா, ப்பா”ன்னு கண்ணீரோட சொல்லிட்டு இருந்தார். எனக்கு அந்த நேரம் அது வேடிக்கையா இருந்துச்சு.

தாத்தாவ பூ பல்லக்குல வச்சு தூக்கினப்ப அம்மா ஒரு சொட்டு கண்ணீர் விட்டா. அப்புறம் என்ன நினைச்சாளோ தெரியல, அழுதுட்டு இருந்த சித்திங்கள எல்லாம் பாத்து, “யாரும் அழாதீங்க, சந்தோசமா அப்பாவ வழி அனுப்பி வைங்க”ன்னு அதட்டிட்டு இருந்தா. யாரோ தாத்தா கால்ல கிடந்த “ஷூ”வ கழட்டப் போனாங்க. அம்மா அத கழட்ட வேணாம்னு தடுத்துட்டா. வழியெல்லாம் பூ தூவி, பெத்த பிள்ளைங்க மட்டுமில்லாம வளர்ப்பு பிள்ளைங்க மூணு பேரும் சேர்ந்தே தாத்தாவ இருப்புக் குழிக்குள்ள இறக்கினாங்க.

அப்படியே மடக்கி உக்கார்ந்த நிலைல தாத்தா ஜம்முன்னு இருப்புகுழிக்குள்ள  உக்காந்தாங்க. வாசல ஒரு பலகை வச்சு அடச்சு, அப்புறமா நேர் குழில மண்ணை வெட்டிப் போட்டு மூடிட்டாங்க. தாத்தா இனி இங்க தான் தவம் செய்யப் போறார்னு நான் நம்பிகிட்டேன். அப்படி தான் அவர் தோரணை இருந்துச்சு. தாத்தா மேல யாரும் மிதிச்சுடக் கூடாதுன்னு ராத்திரியோட ராத்திரியா அவர் மேல கிரானைட் கல்லை வச்சு நினைவு சின்னம் எழுப்பிட்டாங்க மாமாக்கள் அத்தனை பேரும்.

தாத்தா கால்ல ஒரு “ஷூ” இருந்துச்சுல, அந்த ஷூ” இல்லாம தாத்தா வெளிநடை  இறங்க மாட்டாராம்நாப்பது வயசுல சுகர் வந்து வலது கால் பெருவிரல எடுத்தே ஆகணும்னு டாக்டர் சொன்னப்ப இதுக்கு நான் செத்துப் போய்டலாம்னு வெளில கிளம்பி வந்துட்டாராம்நல்லவேளை லீபுரம் பெரிய டாக்டர் தான்ஷூ” போட்டுகிட்டா விரல் வெளில தெரியாதுன்னு சொல்லி விரலையும் அறுத்து, “ஷூவையும் மாட்டி விட்டுருக்கார்அதெப்படி ஒத்த பெருவிரல் போனதுக்கே உயிர விடணும்னு நினச்ச தாத்தா ஒரு காலே இல்லாத என்னை எம்புள்ளஎன்புள்ளன்னு நெஞ்சு மேல தூக்கிப் போட்டு சீராட்டினாரோ?

இல்லஅப்படி அம்மா சொல்லித் தான் நான் கேள்விப்பட்ருக்கேன்எனக்கு நினைவுத் தெரிஞ்சி தாத்தா என்னை தொட்டுத் தூக்கி கொஞ்சின நியாபகமே இல்லஎல்லாமே தூரமா நின்னு சொல்றது தான்எனக்கு அவர் உருவத்த விட குரல் தான் அதிக பரிட்சயம்என்னைத் தாங்கிப் பிடிச்சது எல்லாம் அப்பா தான்இன்னிக்கி வரைக்கும் குறையோட பொறந்துட்டான்னு ஒரு வார்த்த என்னை பேசினது இல்லஅப்படி வேற யாரையும் பேச விட்டதும் இல்ல. “தாத்தாவோட கம்பீரமும் அப்பாவோட அதிகாரமும் கொஞ்சம் கூட குறையாத ஏக்கியம்மைன்னு அம்மா அடிக்கடி என்னைப் பாத்து சொல்லுவாஉக்கிர காளியாம் நான்

ஏம்மாவலது காலை எடுத்தே ஆகணும்னு நிலை வந்தப்ப நீ ஏன் எங்கப்பா செத்துப் போகணும்னு சாமிகிட்ட வேண்டிகிட்ட? கால் இல்லனாலும் தாத்தா நம்ம கூட இருந்துருப்பாங்கல”ன்னு என்னோட இருபது வயசுல அம்மாகிட்ட கேட்டேன் ஒருநாள்.

“எங்கப்பா யாரு தெரியுமா? ஊருக்கே படியளக்குற சாமி. அவர் ஒரு குறையோட மத்தவங்க முன்னால நிக்குறத நினைச்சுக் கூட பாக்க முடியாது மோளே. இதெல்லாம் சொன்னா உனக்கு புரியவும் புரியாது. எங்கப்பா செத்தது எனக்கு சந்தோசம் தான். என்ன அந்த பாழாப்போன சக்கர வியாதி வராம இருந்துருக்கலாம்”ன்னு அம்மா கண்கலங்கி சொன்னாலும் அதுல ஒரு நிறைவு இருந்துச்சு. செங்கல் தடுக்கி புண் வந்த காலை முட்டுக்கு கீழ எடுத்தே ஆகவேண்டிய நிலைல தான் மக்களை எல்லாம் கூட்டி உக்கார வச்சு தேறுதல் சொல்லிட்டு தாத்தா ஆப்பரேசனுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி செத்துப் போனார்.

அது ஒரு தெய்வீக சாவுன்னு அம்மா அடிக்கடி சொல்லுவா. தன் அப்பாவோட சாவை கொண்டாடுற அம்மா எனக்கு எப்பவும் விசித்திரம் தான்.

யோசிச்சுட்டே இருந்ததுல என்னையறியாம “இருப்புக் குழி”ன்னு புலம்பிட்டேனோ என்னவோ, இருப்புக் குழினா என்னம்மான்னு கேட்ட மகள்கிட்ட விளக்கம் சொல்ல ஆரம்பிச்சேன்.

ஒரு மனுஷன் முழுமையா தன்னோட வாழ்க்கைய திருப்தியா வாழ்ந்துட்டு ஒரு நிறைவோட இங்க இருந்து போறான் பாத்தியாஅந்த மனுசன அப்படியே கிடையில போடாம உக்காத்தி வச்சு கும்பிடுறது தான் இருப்புக் குழி. அந்த பாக்கியம் என் தாத்தனுக்கு உண்டு

அப்ப நம்ம தாத்தாவுக்கும் இருப்புக் குழி உண்டுல”. அவ அப்படி கேட்டதும் திடுக்கிட்டுப் போனேன்.

அடித்து துவைக்கப்பட்டு, கிட்டத்தட்ட பைத்தியக்காரி ஆக்கப்பட்டு, “வெளிலப் போடி”ன்னு தொரத்தப்பட்டு, ரெண்டு பிள்ளைங்களோட நான் வந்து நடுவீட்டுல நின்னப்பவும், நீ உள்ள போ, பாத்துக்கலாம்ன்னு சொன்னவர் தான். இன்னிக்கி வரைக்கும் “திரும்பிப் போ”ன்னு சொன்னது இல்ல. என்னோட பால்யத்த நான் மீட்டெடுத்துட்டேன்னு இப்ப வரைக்கும் நம்பிகிட்டு இருக்கேன்.

அப்பாவோட சாவை எப்படி கற்பனை பண்ண? என்னவோ என் அம்மாவோட தைரியம் எனக்கு இல்ல போலஅப்பா இல்லாத ஒரு வாழ்க்கைய நினைச்சுக் கூட பாக்க முடியலஇருப்புக் குழில நிம்மதியா இருக்குற அளவு அப்பா நிறைவோட தான் இருக்காரான்னும் தெரியல.

“ஆனா ஒண்ணுமா, என் அப்பன் இருக்கானே, அவன எல்லாம் துண்டு துண்டா வெட்டி சாக்குல போட்டு தான் அடக்கம் பண்ணுவாங்க. நீ வேணா பாரேன்”ன்னு சொன்ன மக வாய பதறிப் போய் மூடினேன். “அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுடா”ன்னு அவள சமாதானம் பண்ணினாலும் மனசுக்குள்ள என்னமோ அந்த காட்சி ஒரு பெரிய நிம்மதியான பெருமூச்சை தந்தது. அவன அப்படி தான் நான் வெட்டிப் போட்டுருக்கணும். இன்னமும் வெளில சொல்ல முடியாத ரணம்.

எல்லாம் கொஞ்ச நேரம் தான். பத்து வயசு மகளோட மனசுல ஒரு தகப்பனா தோத்துப் போன அந்த மனுசன நினச்சு பரிதாபம் தான் வந்துச்சு. எங்கிட்ட இருந்து சொத்து பத்தெல்லாம் பிடிங்கிட்டு இன்னொருத்தியோட ராஜபோக வாழ்க்கை வாழுறதா அவன் நினச்சுட்டு இருக்கான். இருந்து என்ன பிரயோஜனம், செத்தா நினச்சு அழ அவனுக்கு ஒரு மக இல்லையே. வேணா பாருங்க, அவன பாடைல தூக்கிக் கொண்டுப் போய் குழில போட்டு நல்லா நங்கு நங்குன்னு சவுட்டப் போறாங்க. ஹாஹாநான் ஏக்கியம்மையாம்உக்கிர காளியாம்இந்த அம்மாவுக்கு கிறுக்கு தான் புடிச்சிருக்கு. நான் நீலிலா.
Read more...

தந்தை போட்டிச் சிறுகதை - 25

Rate this posting:
{[['']]}
எப்போ  வருவீங்கப்பா.....

இளமாறன் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அமர்ந்திருந்தான். அவனது  மனம் சிறிது நேரத்திற்கு முன்பு மகள் தன்னை போகக் கூடாது என்று நெஞ்சில் சாய்ந்து அழுததை  எண்ணிக் கொண்டிருந்தது.

முதன்முதலாக சொந்தமண்ணைப் பிரிந்தபோது எழாத வலி, தாய், தந்தையை பிரிந்தபோது எழாத வலி, கட்டிய மனைவியை திருமணம் முடிந்து இரு மாதங்களிலேயே பிரிந்து சென்றபோது எழாத வலி, இன்று மகள் கதறியழுததும் நெஞ்சமே வெடித்துவிடும் அளவிற்கு வலித்தது.

அந்த வேதனையை மறக்க விமானத்திற்குள் வந்து கொண்டிருந்தவர்களை பார்க்கத் தொடங்கினான். ஒவ்வொரு முகங்களும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை தாங்கி இருந்தது.
இளமாறனின் அருகில் ஒருவர் அமர்ந்தார். வயதானவராகத் இருந்தார். அவர் இளமாறனைப் பார்த்து சிநேகிதமாக சிரித்தார். அவர் முகத்திலும் குடும்பத்தை விட்டு பிரிந்து போகும் சோர்வு தெரிந்தது.

தன் மனதிலுள்ள சோகத்தை மறைக்க கண்மூடி இருக்கையில் சாய்ந்தான். அவன் காதுகளில் மகள் கேட்ட வார்த்தையே சுற்றிச்சுற்றி வந்தது. ‘மறுபடியும் எப்போ வருவீங்கப்பா?’
மகள் பிறந்துவிட்டாள் என்றறிந்தபோது அந்த பிஞ்சு ஸ்பரிசத்தை உணரமுடியாமல் முதன்முதலாக வெளிநாட்டில் வேலை செய்வதற்காக மனம் வருந்தியது.

அடுத்து மகள் தவழ்ந்தது, அடியெடுத்து வைத்தது, பேசக்கற்றுக் கொண்டது என்று அவளின் ஒவ்வொரு செயலையும் கண்டுகளிக்க முடியாமல், அனைத்தையுமே கனவில் மட்டுமே கண்டபோது மனம் ஏங்கித் தவித்தது.

அந்த பிஞ்சை நெஞ்சில் போட்டுக் கொண்டு பல கதை பேச மனம் ஆசை பலவிருந்தாலும்  நடைமுறையில் சாத்தியமில்லாமல் போனபோது தன் மீதே கோவம் எழுந்தது.

‘பேசாமல் வேலையை உதறிவிட்டு சென்று விடலாமா’என்றெண்ணினான் . ஆனால், என் மகளுக்கு நான் அருகில் இல்லையென்றாலும் அவளுக்கு அனைத்துமே கிடைக்க வேண்டும். அதற்கு நான் இங்கிருப்பதுதான் நல்லது என்றெண்ணி தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான்.

இரண்டு வருடங்கள் கழித்து மகளை பார்க்கப் போகும் ஆர்வத்தில் அவளுக்காகத் தேடித்தேடி விளையாட்டுச் சாமான்களும், சட்டைகளும் வாங்கியபோது நோபல் பரிசு வென்றவனை போன்று மனம் குதியாட்டம் போட்டது.

ஏர்போர்ட்டில் மனைவியின் கைகளில் தனது தேவதையை சந்தித்த அந்த நிமிடம், வாழ்வின் பொன்னான நிமிடங்கள். தன்னிடம் வராமல் அந்நியனாக தன்னை பார்த்தவளை கண்டு, மனம் சுனங்கியவனை மனைவியின் ஆறுதல் வார்த்தைகள் சமாதானமடைய செய்யவில்லை.

வீட்டிற்கு சென்ற பின்னரும் மறைந்திருந்து பார்ப்பதும், எட்டியே நிற்பதுமாக இருந்த மகளின் உருவத்தை கண்களில் நிறைத்துக் கொண்டிருந்தான். மாலைநேரம் சிறிது தள்ளி அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தவள் மெல்ல எழுந்து மடியில் அமர்ந்து முகம் பார்த்தாள். அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டான்.
அந்த நிமிடங்களை இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்த்தது. அந்த நினைவுடனே கண்ணத் திறந்தவனது எதிரில் பக்கத்து சீட்டு பெரியவரின் முகம் தெரிந்தது.

“என்ன தம்பி இப்போத்தான்  முதன்முறையா குடும்பத்தை விட்டு வெளிநாட்டுக்குப் போறீங்களா?”

அவர் தன்னிடம் திடீரென்று கேள்விகேட்டதும் சற்றுத் தடுமாறி... “இல்ல, என் பொண்ணு ரொம்ப அழுதா...போவாதீங்கன்னு. அதுதான் மனசு கேட்கல” என்றான்.

“அப்படித்தான் இருக்கும் தம்பி...ஆம்பளபயலுங்க கண்டுக்க மாட்டானுங்க...நீ போயிட்டு வரும்போது காரு பொம்மை வாங்கிட்டு வா, ட்ரெயினு பொம்மை வாங்கிட்டுவான்னு சொல்லுவான்னுவ. ஆனா, இந்த பொம்பளபுள்ளைங்கதான் போவாதீங்கன்னு அழுது வைக்கும்” என்றார்.

அவர் சொன்னதை கேட்டுத் தலையாட்டியவன் மனதில் மகளின் கண்ணீர் நிறைந்த கண்களே வந்து போனது. பக்கத்து சீட்டு பெரியவரோ அவன் தான் பேசுவதை கேட்கிறானா இல்லையா என்றெல்லாம் பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தார்.

“நான் வெளிநாட்டுக்கு வேலைக்கு போயி முப்பது வருஷம் ஆச்சு. ஓரளவு எல்லாத்தையும் கரையேத்தியாச்சு. ரெண்டு வருஷத்துக்கு ஒருக்கா ஊருக்கு போகும்போது புள்ளைய கூப்பிட்டு அப்படி செய்யாதடான்னு ஏதாவது சொன்னோம்ன்னு வையுங்க, நீ லீவ்வுக்கு வந்துருக்க...வந்தமா ரெஸ்ட் எடுத்தமா, போனமான்னு இருன்றான்.அவ்வளவுதான் நமக்கு அங்கே ஒட்டுதல்.”

 “உங்களுக்கு எத்தனை பசங்க சார்?”

“மூணு . ரெண்டு பையன் ஒரு பொண்ணு. பெரியவன் பேங்க்ல வேலை பார்க்கிறான். கல்யாணம் பண்ணி அவனுக்கு ஒரு குழந்தை இருக்கு.பெண்ணையும் கட்டிக் கொடுத்தாச்சு. சின்னவன் தான் சுத்திகிட்டு இருக்கான். அவனுக்கு ஒருவழி பண்ணிட்டா, முடிச்சுகிட்டு இங்கேயே வந்துடுவேன்.”

நான் பத்து வருஷமாத்தான் கல்ப்ல இருக்கேன்.கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தப்ப ஒன்னும் தெரியல. ஆனா, பொண்ணு பிறந்தப் பிறகு என்னால அவளை விட்டுட்டு இருக்க முடியல” என்றான் இளமாறன்.

குடும்பத்துக்காக நம்ம சந்தோஷத்தை அடமானம் வச்சாத்தான் நம்ம பிள்ளைகள் நல்லா இருக்கும் தம்பி ” என்றவர் பெருமூச்சுடன் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார்.

இளமாறனுக்கு மகள் தன்னிடம் பேசியவை ஞாபகத்தில் வந்தது. அவளிடம் “உனக்கு என்ன வேணுமோ கேளுடா செல்லம்” என்று கேட்டதும், அவள் கூறியவைகளை கேட்டு மனம் நெகிழுந்து போனது.

“நான் ஹோம்வொர்க் முடிச்சிட்டு அப்பா எப்போ வருவாங்கன்னு காத்துகிட்டு இருக்கணும். அப்புறம் லீவ் நாளில் பீச்சுக்கு போகணும். நான் உங்க கையை பிடிச்சுகிட்டு அலையில நிக்கணும். வீட்டில டிவி பாக்கும்போது உங்க மேல சாஞ்சுகிட்டே பார்க்கணும். தூங்கும்போது உங்க மேல காலை போட்டுக்கிட்டு தூங்கனும். எனக்கு இதுதான்ப்பா வேணும். எப்பவும் நீங்க எங்க கூடவே இருக்கணும்.”

ஒரு தகப்பனுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். அடுத்த முறை கட்டாயம் காண்ட்ராக்ட்டை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிவிட வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டான். அதிலும் ஏர்போர்ட்டில் அழுத கண்களுடன் “ எப்போ வருவீங்கப்பா” என்று கேட்டது மேலும் அவன் முடிவைத் திடப்படுதியது.

தோஹா விமானநிலையத்தில் இறங்கி வெளியில் வந்து தனக்காக காத்திருந்த வண்டியில் ஏறிய பின், லேசாக தலைவலிப்பதைப் போல் தோன்றியது.

“எங்கேயாவது ஒரு ஒரு ஹோட்டலில் நிறுத்துங்க சுப்பையா. காப்பி குடிச்சிட்டு போய்டலாம்.”

“ சரி சார்.”

அரைமணி நேரப் பயணத்திற்கு பின் வழியிலிருந்த ஒரு ரெஸ்டாரண்டில் நிறுத்தினார் சுப்பையா.

“நீங்களும் வாங்க.”

“இல்ல சார். நான் குடிச்சிட்டுதான் வந்தேன்.நீங்க போயிட்டு வாங்க.”

உள்ளே சென்று அமர்ந்தவன் காப்பிக்கு ஆர்டர் கொடுத்து, மனைவிக்கு வந்து இறங்கியதை தெரியப்படுத்திவிட்டு அமர்ந்தான். போனிலிருந்த மகளின் படத்தை பார்த்தவனின் மனம் நிறைவாக உணர்ந்தது.

அப்போது பயங்கர சப்தத்துடன் ஏதோ வெடித்தது. திடீரென்று ஹோட்டல் முழுவதும் கரும் இருளும் புகை நாற்றமும் வரத் தொடங்கியது. மீண்டும் பெருத்த சப்தத்துடன் வெடிக்க இளமாரனை நோக்கி நெருப்புத் துண்டமாக சிலிண்டரின் ஒரு பகுதி அவன் மேல் விழுந்தது.

உட்கார்ந்திருந்த இடத்திலிருந்த தூக்கி வீசப்பட்டான். கையிலிருந்த போன் எங்கோ போய் விழுந்தது. ஒருபகுதி உடல் பற்றி எரிய ஆரம்பித்தது.

தன் உயிர்ப் பறவை கூட்டைவிட்டுப் பறக்கிறது என்பதை உணர்ந்தவனது கன்னங்களில் கண்ணீர் கோடாக இறங்கியது. அவனது காதுகளில் மகளின் குரல் “ எப்போ வருவீங்கப்பா”.
Read more...

Monday 30 May 2016

ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் சிறுகதைப் போட்டியில்.. மறு அறிவிப்பு

Rate this posting:
{[['']]}
வணக்கம் நண்பர்களே...
வெட்டி பிளாக்கர் குழுமம் இரண்டாம் முறையாக சிறுகதைப் போட்டி நடத்துகிறது. போட்டி பற்றிய அறிவிப்பு மற்றும் விவரங்களை  வெட்டிபிளாக்கர் குழுமம் நடத்தும் சிறுகதைப் போட்டி 2016  என்ற பதிவில் வெளியிட்டிருந்தோம். 
வலைப்பூ - ப்ளாக் வைத்திருப்பவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவித்திருந்தோம். ஆனால், ப்ளாக் இல்லாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு தரலாமே என மின்னஞ்சலிலும், முகநூலிலும் கேட்டுக் கொண்டதால், கதை எழுதும் ஆர்வமுள்ள அனைவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அதோடு சிறுகதைகளை அனுப்ப வேண்டிய  கடைசி தேதியும் (15 - 06- 2016 இரவு 12.00க்குள்) இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்படுகிறது. 


பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 8000

இரண்டாம் பரிசு ரூ 5000

மூன்றாம் பரிசு ரூ 2500

சிறப்பு பரிசு ரூ750 ஆறு படைப்பாளிகளுக்கு 

விதிமுறைகள். 

1.ப்ளாக் வைத்திருப்பவர்கள் மட்டும் மூன்று கதைகள் வரை அனுப்பலாம். மற்றவர்கள் ஒரு கதை மட்டுமே அனுப்ப வேண்டும். 

2.இதுவரை எங்கும் வெளியாகாத கதைகளாக இருக்க வேண்டும் 

3.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

4. கதைக்களம் தந்தையைப் பற்றி இருக்க வேண்டும். முடிந்தவரை சம கால மொழிநடை வழக்கில் எழுத்துப் பிழையின்றி இருத்தல் நலம்.. 

5. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப் பிளாக்கர் அட்மின்கள், நடுவர்கள் கலந்து கொள்ளக் கூடாது. 

6. PDF/ MS WORD/ NOTEPAD மற்றும் பிற வடிவில் இணைப்பாக அனுப்ப வேண்டாம். (பலர் இந்த முறைகளில் அனுப்பியதால் பிளாக்கில் பதிவு செய்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கிறோம்) ஆகையால் யுனிக்கோடு முறையில் மின்னஞ்சலில் நேரடியாக தட்டச்சு செய்து, மின்னஞ்சலில்  மட்டுமே அனுப்பவும். 

7. கதைகளை அனுப்புகிறவர்கள் தங்களது, விவரங்களை (ப்ளாக் முகவரி/முகநூல் முகவரி)  மறக்காமல் குறிப்பிடவும்.  
********************************************

கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள் 


உங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைதள முகவரி, உங்கள் தொடர்பு எண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 15 -06-2016 இரவு 12.00க்குள் அனுப்பவும். 

· கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொது வெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 

· நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்பட மாட்டாது 

· போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை எங்கும் வெளியிடக்கூடாது. 

·கதைகள் http://vettibloggerstories.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும் 

ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com என்ற முகவரிக்கு மடல் வரைக.
Read more...

தந்தை போட்டிச் சிறுகதை - 24

Rate this posting:
{[['']]}
தந்தைக்கு - ம.. த.. 

மூன்று விளக்குகளில் மஞ்சள் நிறம் மட்டும் விட்டு விட்டு எரிந்துகொண்டிருந்தது. இருள் சூழ்ந்திருக்க, சாலையோர விளக்கின் மஞ்சள் சுடரொளியில் கொசுக்கள் களியாட்டமிட்டுக்கொண்டிருந்தன. பயமுறுத்தும் இருட்டும், நிசப்தமும் அந்த இடம் முழுக்க  பரவியிருந்தது. நிசப்தத்தை பகிரங்கமாக துளைத்து அதனுள் ஊடுருவி சென்றது விபத்தின் சப்தம். தூக்கம் கலைந்தவராய், அமைதியாக எழுந்து நின்றார் தந்தை. அவரது காலடியில் ஒரு ஐந்நூறு ரூபாய் காகிதம் காற்றில் துடிக்க, ஒரு நிமிடம் அதை உற்று பார்த்தார். துடிக்கும் பணத்தை, இதயத்திற்கு அருகே வைத்து, தன் கையால் இறுக்கிப்புடிக்க எண்ணினார். ஆனால், ஒரு கதறல் சப்தம் அவரது எண்ணத்தை மாற்றி, அவரை ஓட வைத்தது. ஒரு கார், தலைகீழாக கவிழ்ந்து கிடக்க அதனுள்ளே மூன்று பேர் கதறிக்கொண்டிருந்தார்கள்.
----
2 நாட்களுக்கு முன்பு,                         [48 மணி நேரம்]
    “தோரணம் கட்டியாச்சு, நம்ம மகளுக்கு புடிச்ச ப்ளாக் ஃபாரஸ்ட் ஐஸ் கிரீம் கேக் தயார். பக்கத்துவீட்டுக்காரங்க, நண்பர்கள்ல வந்துட்டு இருக்காங்க. இன்னைக்கு நம்ம மகளோட பிறந்தநாள் விழாவ ரொம்ப சிறப்பா கொண்டாடனும்.” 

தந்தை பேசுவதை கேட்டு சிரித்தாள் அவரது மனைவி. அவளது சிரிப்பை உணர்ந்தவராய் அவளருகே சென்று, அவள் நெற்றியில் முத்தமிட்டு “நீயும், மகளும் தாண்டி என் உலகமே” என்றார்.

தந்தையின் தொலைபேசி அலற,

“ஹலோ”…
“வந்துடீங்களா?”...
“இதோ வந்துட்டேன்”...

    “எல்லாரும் ஒவ்வொருத்தவங்களா வர ஆரம்பிக்கிறாங்க. நான் போய் பலூன் கட்றேன்” என்றார் தந்தை.

தந்தையோட குழந்தைத்தனத்தை பார்த்து நெகிழ்ந்துபோனாள் அவரது மனைவி. அத்தருணத்தில் தந்தை அவ்வளவு அழகாக தெரிந்தார். அவரை முதன்முதலில் பார்த்தது போல் இருந்தது அவரது மனைவிக்கு. “எல்லாமே தயாரா இருக்குதா” என்றார் தந்தை மனைவியிடம். 

மகள் உள்ளே நுழைந்தவுடன், 

“ஹாப்பி பர்த்டே” 

“அப்பா...”

“அப்பாகிட்ட வாமா, என் செல்லம்...”

தோரணம், கேக்கை பார்த்து, ஆச்சர்யத்தின் உச்சத்தில், தந்தையை கட்டி அணைக்க ஓட்டம் எடுத்தாள் மகள்.

மகளை தழுவ, மண்டியிட்டு, கைகளை விரித்து காத்திருந்தார் தந்தை. அனால், மகள் எவ்வளவு வேகமாக ஓடி வந்தாலும், அவளால் தந்தையை நெருங்கமுடியவில்லை. நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தாள்.  அதை அறிந்து அவள், “அப்ப்பா” என்று கத்த, பதறிப்போய் தூக்கத்தில் இருந்து எழுந்தார் தந்தை.

    அவரது நிலைமையை அவருக்கு படம் போட்டு கனவாக காட்டியது அவரது மூளை. பல இரவுகளைப்போல் அன்றும் அவர் தூங்கவேயில்லை. மகளை பற்றிய கவலை அவரை விடியல் வரை வாட்டியெடுத்தது.

“இந்த சூவ தச்சு தாங்க"

“குடுங்க சார்”, இந்த சூவே 500 ரூபா தான் இருக்கும், என்று மனதிற்குள் நினைத்துகொண்டு, சூ அடில பிஞ்சுருக்கு, சுத்தி தைக்கணும், 50 ரூபா ஆகும் சார்.

“30 ரூபா வாங்கிக்கோங்க"

உனக்கு இந்த சூவ தூக்கி போடவும் மனசு இல்ல, எனக்கு 50 ரூபா குடுக்கவும் மனசு இல்ல என மனதிற்குள் நினைத்துகொண்டு, சிரித்தார் தந்தை.

நான் ஏமாறல, வெலைய கொறச்சுட்டேன் என்று மனதிற்குள் நினைத்துகொண்டு, சிரித்தான் சூ தைக்க வந்தவன்.

    சூவை தைத்து முடித்து, அவனிடமிருந்து 30 ரூபாயை பெற்றுக்கொண்டார் தந்தை. அதே சமயம், ராமச்சந்திரனும், செல்லம்மாவும், வழக்கம் போல தங்களது மூன்று வயது பையனையும் (செல்வம்), தந்தையின் மகளையும் அழைத்துவந்தார்கள். மகளை கண்டதும், கண் கலங்கி மகளை இறுக்கி அணைத்தார் தந்தை. அவளது முகத்திற்கு தொடர்ந்து முத்தங்களை பரிசளித்தார்.
    
    “நீ செல்வத்தோட இரு, அப்பா போய் சாப்ட ஏதாவது வாங்கிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு போய், அப்பமும், டீயும் வாங்கி வந்து,தன் மகளுக்கும், செல்வத்திற்கும் குடுத்தார். இருவரும் காலையில் கஞ்சி குடித்திருந்தாலும், டீ வேண்டாமென்று சொல்லவில்லை.
    
    மதிய வேளையும் வந்தது. மகளுக்கு பசிக்கும் என்று மூளை அவருக்கு சமிக்ஜை செய்தது. மகளிடம் கடையை பார்க்க சொல்லிவிட்டு கோவிலுக்கு சென்று வரும் போது, கையில் சாப்பாடு வாங்கி வந்து மகளுக்கும், செல்வத்திற்கும் ஊட்டிவிட்டார் தந்தை. 

“நீயும் சாப்டு பா?” 

நான் ஏற்கனவே சாப்டு தான்மா உனக்கு வாங்கிட்டு வந்துருக்கேன். ஆ சொல்லு", என்று வழக்கம் போல மகளை சமாளித்தார் தந்தை. அவர் ஏற்கனவே சாப்பிட்டது உண்மை தான்.

    மாலை வேளையில் மகளுக்காக மருந்தெண்ணெயை வாங்கி வந்து மகளின் காலில் தேய்த்தார் தந்தை.

“செல்வம் எங்கம்மா?” 

அவங்க அப்பா அம்மா வந்து கூட்டிட்டு போய்ட்டாங்கபா. புத்தகத்துல நான் ஒன்னு படிச்சேன் அத சொல்லவா?”

“சொல்லுமா"

“கல்யாணம் ஆகாத ஒரு ஜோடிக்கு பொறந்த ஒரு பையன, ஒரு அப்பா அம்மா தத்தெடுத்து வளத்தாங்க. சின்ன வயசுல இருந்தே அவனுக்கு கஷ்டம். நண்பர்களோட வீட்டு முற்றத்துல தான் தூங்குவான். அவன் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான் தெரியுமாபா? காலியான பாட்டில எடைக்கு போட்டு, பன், ரொட்டி வாங்கி சாப்டுவான். ஞாயித்து கெழமனா 7 மைல்நடந்து போய் கிருஷ்ணன் கோவில்ல அன்னதானம் சாப்டுவான். அவனுக்கு தெரிஞ்சது எல்லா, வித விதமா அழகா எழுதுறது மட்டும் தான். அவன் ஃப்ரண்டும், அவனும் சேந்து ஒரு டிவைஸ் தயாரிச்சாங்க. இவன் அந்த டிவைஸ்ல இவனோட எழுத்துக்கு உயிர் குடுத்தான். இப்போ அந்த டிவைஸ் தான் உலகத்துலேயே ரொம்ப அழகான டிசைன் உள்ள டிவைஸ். அவன் புதுசா ஏதும் பண்ணல, அவனுக்கு தெரிஞ்சத அவன் பணமாக்கினான்.”

மகள் வலியை மறந்து, கூறியதை பொறுமையாக கவனித்துக்கொண்டிருந்தார் தந்தை.
    பின் அவரே,“வலிக்குதாமா?” என்றார்.
    
    “இல்லப்பா ………… அப்பா….....…. இந்தாங்கபா உங்களுக்கு புடிச்ச குழி பனியாரம்”
    
    சற்று கோபத்துடன், “காசு ஏது?”
    
    “நீங்க கோவிலுக்கு போனப்ப, ஒரு செருப்பு தச்சேன், அதான்.”
    
    “எத்தன தடவ சொல்லிருக்கேன். இந்த பாழாப்போன வேல என்னோட முடியட்டும். நூலகத்துல இருந்து நான் புக் எடுத்துட்டு வர்றேன். நீ படிக்குற வேலைய மட்டும் பாரு. இனிமேல் நீ குத்தூசி மேல கை வைக்க கூடாது இது என் மேல சத்தியம்" என்று மகளை அதட்டியது தந்தையின் குரல்.

    “நான் ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்துல போய் சேந்துரவா? கால் போன என்ன வச்சு நீ ரொம்ப கஷ்டப்படுறபா. அம்மா கூடவே நானும் அந்த விபத்துல செத்துபோய் இருக்கணும். நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்லப்பா, நீங்க கஷ்டபடுறது தெரியாம இருக்க. மத்தியானம் மணி அண்ணா பெருமாள் கோவிலுக்கு சவாரி வந்துருக்காரு, அங்க உன்ன பாத்தாரு. ஏன்பா? பிச்சகாரங்களுக்கு போடுற அன்னதானத்துல ஒரு ஆளா உக்காந்து சாப்டுருக்க. செருப்பு தைக்குறது ஒன்னும் கேவலம் இல்லப்பா. நீ சுயதொழில் பண்ற ஒரு முதலாளி. எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்குப்பா” என்று ஆதங்கத்தை கொட்டினாள்.
    
    தந்தைக்கு தூக்கிவாரி போட்டது. மகளின் வார்த்தை ஒவ்வொன்றும் அவர் மனதை தைத்தது. கண்ணில் நீர் பெருகி, விழியை விட்டு வழிந்து கன்னம் நோக்கி வர, கண்ணீரின் மேல் முத்தமிட்டாள் மகள். ”இன்மேல் என்னோட அப்பா உழச்சு மட்டும் தான் சாப்டுவார். இலவசமா வர்ற எதையும் வாங்க மாட்டார்.  நீ உழைக்காமல் வரும் எதுவும் நமக்கு  வேண்டாம். சரியாப்பா“ என்று தன் பிஞ்சு கையால் தந்தையின் முகத்தை ஏந்தி தலையை ஆட்டினாள் மகள்.

“சரிம்மா, இனிமேல் அப்டி பண்ணமாட்டேன். நேரமாச்சு. செல்வம் வீட்டுக்கு போலாமா”, என்று அவளை தன் தோளில் தூக்கிக்கொண்டு ராமச்சந்திரன் வீட்டில் விட்டுவிட்டு வந்தார். 

மகளின் ஒவ்வொரு வார்த்தையும் அவரது காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. அவள் சொன்ன கதையும் காரணமில்லாமல் சொல்லவில்லை என்று புரிந்தது தந்தைக்கு. தன் மகளிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை எதிர்பாக்கவில்லை, அவளை சின்ன பொண்ணு என்று நினைத்தது தவறு என்பதை  தந்தைக்கு உணர்த்தியது அவளது பேச்சு. இவள் மனசுக்குள்ள இப்படி எல்லாம் நினைப்பு இருக்கிறதா! என்று மனதிற்குள் குமிறினார். அவள் பேசியதை நினைத்துக்கொண்டே தன் பிளாட்பாரம் கடைக்குள் படுத்தார் தந்தை. கன்னத்தை அறைந்து அவரை எழுப்பியது சூரியஒளி. வழக்கம் போல கட்டண குளியலறையில் குளித்துவிட்டு வெளியே வரும்போது, ராமச்சந்திரன் மூச்சிறைக்க ஓடி வந்து, “உன்னோட பொண்ணு பெரிய மனுசி  ஆய்ட்டாயா” என்றார் தந்தையிடம். 

    அவர் சொன்ன விஷயம் அவரை உறையவைத்தது. இப்படி ஒரு நிலை வரும் என்பதை தந்தை அறிவார். அனால் இத்தருணத்தில் வரும் என்று அவர் எதிர்பாக்கவில்லை. அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் பரிதவித்தார். அவரையும் மீறி அவர் கண்ணில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. மகளை காண ஓட்டம் எடுத்தார். முதன் முதலில் மகளை கையில் ஏந்திய தருணம். அவள் பரிசத்தை தழுவியது. தவழ்ந்தது, நடக்க பழகியது, சைக்கிள் ஓட்ட கற்றது. அவரும், அவர் மனைவியும் மகளின் வளர்ச்சியை பார்த்து பூரித்தது என ஒவ்வொரு தருணமும் அவர் கண்முன்னே விரிந்தது. ஒவ்வொரு தருணமும் அவர் ஓட்டத்தை அதிகப்படுத்த, கல் தடுக்கி கீழே விழும் போது, கண் விழித்தார் தந்தை. அவர் நெஞ்சம் படபடத்தது. அவர் கவலையை பயம் கொன்று தின்றது. இரவு முழுவதும் யோசித்துக்கொண்டே இருந்தார்.

    காலை ஆனதும், மணி வந்தான். “ஏன்யா உனக்கு இந்த வேலை. பேசாம நீயும் நம்ம ராமச்சந்திரனோட கட்டட வேலைக்கு போகலாம்ல.”

    தந்தை எதுவுமே பேசவில்லை. அமைதியாக யோசித்துக்கொண்டே இருந்தார். 

    “பையன்னா பரவாயில்ல. பொண்ணு. இன்னொருதவங்க வீட்ல படுக்கவச்சா நல்லவா இருக்கு. 3 வயசு பையன கட்டட வேலைக்கு போகும் போது கூட்டிட்டு போகமுடியதுன்னு, ராமச்சந்திரன் அவன் பையன உன்கிட்ட விட்டுட்டு போறான். அதுக்காக உன் பொண்ண அவங்க வீட்ல தூங்க வைக்குற. இதெல்லாம் எத்தன நாளைக்கு?”

    “எங்க நாட்ல எனக்கும் சொத்துபத்துல இருந்தது. போர்ல நடந்த குண்டு வெடிப்புல என் பொண்டாட்டி செத்துட்டா, மகளுக்கு கால் போச்சு. அகதியா இங்க வந்து, இப்போ செருப்பு தச்சு பொழச்சுகிட்டு இருக்கேன்.” என்று தந்தை கண்கலங்கும் போது, மகள் வருவதை பார்த்தார்.

“அப்பா எனக்கு ஜெட்டிஸ்பர் முகவரி - ன்ற புத்தகம் வேணும்பா. படிக்கணும்.” என்றாள், நேற்று எதுவும் நடக்காததைப்போல்.

    “சரிம்மா, ஒரு பேப்பர் ல புத்தகத்தோட பேர் எழுதித்தா, நான் போய் எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு சென்றார். நூலக பொறுப்பாசிரியர் உதவியுடன் மகள் கேட்ட “ஜெட்டிஸ்பர் முகவரி” புத்தகத்தை பெற்றுக்கொண்டு, மனதில் ஒரு புது நம்பிக்கையுடன் சூ, செருப்பு விற்கும் சிறு வியாபாரிகள் சந்தைக்கு நடை போட்டார். 
    
    “ஐயா, நான் சிக்னல்ல செருப்பு தக்கிறேன். உங்க கடைல ஏதும் வேல இருக்கா?” என்று கடை முதலாளியிடம் கேட்டார் தந்தை.
    
    “இல்ல, இல்ல. போ. காலங்காத்தால வந்துட்டாங்க”

    அடுத்த கடையில், “ஐயா, நான் சிக்னல்ல செருப்பு தக்கிறேன்…..”
    
    “இது ஒன்னும் சூ கம்பெனி இல்ல. வாங்கி விக்குற கடை. இங்க வந்து வேல கேக்குற?” என்றார் அந்த கடை முதலாளி.

    “அதான்யா நானும் சொல்றேன். கம்மியான விலைக்கு வாங்கத்தான், மக்கள் இந்த சந்தைக்கு வர்றாங்க. ஆனா சூ 2, 3 மாசத்துலயே பிஞ்சுறுதுன்னு என்னமாதிரி ஆள்கிட்ட வர்றாங்க. நான் என்ன சொல்றேன்னா. நான் சூவ சுத்தி அழகா, மெஷின் தைக்கிற மாதிரி கையால தையல் போட்டு தர்றேன். எனக்கு ஏதாவது சம்பளம் போட்டுதாங்க

    அந்த முதலாளி இவர மேலயும் கீழயும் பாத்தாரு. கைல ஜெட்டிஸ்பர் முகவரி புத்தகம். கேக்குறது செருப்பு தைக்குற வேலை. “வேலையெல்லாம் இல்லை, நீங்க போங்க” என்று அவர் சொல்வதற்கு அவரது தயக்கமே காரணமாக இருந்தது.

அவர் அந்த சந்தையில் ஏறக்குறைய பாதி கடைல கேட்டுபாத்தார். இல்லை என்ற வார்த்தையே அவருக்கு பதிலாக கிடைத்தது. மதியம், மகளுக்கு தன் கையால சாப்பாடு ஊட்டி விடும் போது, நடந்தத சொன்னாரு. 

    “நான் ஒரு கத சொல்லவாப்பா” என்றாள்.
    
    சிரித்துக்கொண்டே, “சொல்லு செல்லம்” என்றார் தந்தை.
    
    "ஒரு விவசாயி தன்னோட தோட்டத்துல எப்பயும் செடி, கொடிகளை தான் பயிரிடுவான். மரந்தோட்டம் வைக்கலாம்னு விதை வாங்கிட்டு வந்து பயிரிட்டான். தினமும் தண்ணீர் பாய்ச்சினான். ஒரு மாதம் ஆனது, எந்த ஒரு மரமும் முளைக்கவில்லை. விதை சரியில்லை என்று நினைத்தான். 6 மாதம் ஆனது. எந்த வளர்ச்சியும் இல்லை. ஆனால் அவன் மனதில் ஒரு நம்பிக்கை. என்ன ஆனாலும் சரி தண்ணீர் பாய்ச்சுவோம் என்று உறுதி எடுத்துக்கொண்டான். ஒரு வருடம் ஆனது. எந்த வளர்ச்சியும் இல்லை. ஆனால் அவன் தண்ணீர் பாய்ச்சுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. இரண்டு வருடம் ஆனது, எந்த வளர்ச்சியும் இல்லை. அந்த கிராமத்து ஆட்கள் எல்லாரும் அவனை கேலி செய்ய ஆரம்பித்தனர். ஆனால், அவன் எதையும் பொருட்படுத்தவில்லை. 3 வருடம் முடிந்த நிலையில், தரையில் இருந்து எதுவுமேயில்லை. தண்ணீரை மட்டும் பாய்ச்சிக்கொண்டே இருந்தான். 4 வது வருடமும் ஆனது. எந்த முன்னேற்றமும் இல்லை. 5 வது வருட ஆரம்பத்தில் சிறு செடி முளைக்க ஆரம்பித்தது. அடுத்த ஆறே வாரத்தில்(1.5 மாதம்) மரம் 90 அடி வளர்ந்தது.  தோட்டத்தை தாண்டி இருக்கும் மலை எவர் கண்ணுக்கும் தெரியவில்லை.  அந்த அளவிற்கு அந்த தோட்டம் முழுவதும் மூங்கில் மரங்கள். முழுமையாக 4 வருடம் (1460 நாட்கள்) எந்தவொரு வளர்ச்சியையும் கண்ணால் பார்க்காமல் நம்பிக்கை வைத்து தண்ணீர் பாய்ச்சினான் அந்த விவசாயி"என்று கூறி முடித்தாள் மகள். 
    
    மகள் எதற்காக இதைக்கூறினாள் என்பதை உணர முடிந்தது தந்தையால். தந்தைக்கு தெளிவு பிறக்க, "நாளைக்கு மிச்சமுள்ள எல்லா கடைலயும் கேக்குறேன்." என்றார்.
    
    "அப்டி ஒத்துவரலேனா, புது சூ, செருப்பு என்கிட்ட தச்சா, 2 வருஷம் பிய்யாதுன்னு ஒரு பலகைல எழுதிதர்றேன். சந்தைக்கு நடுவுல கடைய போட்ருவோம்பா."" என்றாள் மகள்.
    
    "நீ சொன்னா சரியா தான் இ்ருக்கும் செல்லம், நேரமாச்சு செல்வம் வீட்டுக்கு போலாம்" என்று அவளை விட்டுட்டு வந்தார் தந்தை.

இப்பொழுது…

    கண்ணாடி கீறல்களுடன், மூன்று கறை வேஷ்டி மனிதர்களின் முனகல் சத்தம் தந்தையின் காதை எட்டியது. மூவரையும் பத்திரமாக கவிழ்ந்து கிடந்த காரில் இருந்து வெளியே இழுத்தார் தந்தை. தேர்தல் சமயம், கறை வேஷ்டி மனிதர்கள், எதற்காக அவர்கள் வந்தார்கள் என்பதை ஆணித்தரமாக உணரமுடிந்தது தந்தையால். எதுவுமே பேசாமல் நடை போட ஆரம்பித்தார். சிதறிய பணத்தை வலி நடுக்கத்துடன் மூவரும் எடுத்துக்கொண்டிருக்க, அந்த துயரமான விபத்து அவர் கண்முன்னே விரிந்தது. அவன் கண்கள் துடிக்க, நடுங்கிய கைகளுடன் பணத்தை தாங்கி புடித்து, ஒரு கட்டு பணத்தை தந்தையிடம் நீட்டினான் ஒரு அரசியல்வாதி. இரண்டு வினாடி தந்தை கண் மூட, பிஞ்சு கை கன்னத்தை தாங்கி பிடித்து, “நீ உழைக்காமல் வரும் எதுவும் நமக்கு  வேண்டாம்” என்று தன் மகள் கூறியது நினைவிற்கு வந்தது அவருக்கு


தந்தைக்கு - மகள் தந்தை
Read more...