Thursday 16 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 46

Rate this posting:
{[['']]}
எம்.குமரன் S/O மகாதேவன் 

"அம்மா"

"...."

"அம்மா...அம்ம்ம்மாஆஅ ..." என்றான்  பொறுமையிழந்த குரலில் 

"சுகி, குமார் கூப்பிடறான் பாரு" என்ற கணவரின் அழைப்பில் 

"இதோ வரேங்க" என்றபடி வந்தாள் சுகந்தி 

"என்ன கண்ணா? என்ன வேணும்?" என்றவளை முறைத்தான் மைந்தன் 

"ஏண்டா மொறைக்கற?" என புரியாமல் வினவினாள் சுகந்தி 

"நான் கரடியா கத்தறது உன் காதுல விழல, உன் ஹஸ்பண்ட் சுகினதும் ஓடி வரியா?" என அடிக்குரலில் பல்லை கடித்தான் 

"போடா நீ? எப்ப பாத்தாலும் அப்பாகூட போட்டி போட்டுக்கிட்டு" என சிரித்தாள் 

"நான் யார் கூடவும் போட்டி போடல, அதுவும் உன் ஹஸ்பண்ட் கூட நிச்சியமா இல்ல" என்றான் அதே அடக்கிய குரலில் எரிச்சலாய் 

மேலும் ஏதோ சொல்ல  தொடங்கியவன், பெற்றவளின் முகவாட்டத்தில் மௌனமானான் 

"எனக்கு லஞ்ச் வேண்டாம், அத சொல்லத்தான் கூப்ட்டேன்" என்றான் எங்கோ பார்த்தபடி 

"ஏன்ப்பா?"

"என் ப்ரெண்ட் அருணுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்கு, ட்ரீட் போறோம்" என்றபடி வெளியே செல்ல

"டேய், நீ இன்னும் டிபனே சாப்பிடல" எனவும் 

"எனக்கு வேண்டாம், பசிக்கல" எனவும் 

"குமார், சாப்ட்டுட்டு கெளம்பு" என்ற மகாதேவனின் கண்டிப்பான குரலில், எரிச்சலுடன் முணுமுணுத்தபடி டைனிங்டேபிள் நோக்கி நடந்தான் 

அவசர அவசரமாய் இட்லியை முழுங்கியவனை "டேய் மெதுவாடா, இன்னும் டைம் இருக்கே" என சுகந்தி செல்லமாய் அதட்ட 

"நீயும் ஆரம்பிக்காதம்மா. நான் ஒண்ணும் ஸ்கூல் படிக்கற பையன் இல்ல, வேலைக்கு போய் நாலு வருசமாச்சு. எவ்ளோ சீக்கரம் முடியுமோ அவ்ளோ சீக்கரம் இந்த நரகத்துல இருந்து போறதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்றவனின் கோபக்குரல் மனதை வருத்த 

"ஏண்டா இப்படி எல்லாம் பேசற?"என்றாள் வேதனையுடன்  

"இங்க பாரும்மா, மிஸ்டர். மகாதேவன்கிட்ட சொல்லி வெய், இந்த அதட்டற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம், அதெல்லாம் கோர்ட்டோட நிறுத்திக்க சொல்லு. எப்பவும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்" என சிறுபிள்ளை போல் தலையை சிலுப்பியபடி கூற 

அதை ரசித்தபடி "அதை நீயே சொல்லவேண்டியது தான" என சிரித்தாள் சுகந்தி 

"அந்த ஆளுகிட்ட என்னால பேச முடியாது" 

"யார்கிட்ட பேச முடியாதுனு சொல்றார் மிஸ்டர்.குமரன்" என்றபடி மகாதேவன் உள்ளே வரவும் குமரன் அவசரமாய் எழுந்தான் 

"குமார், என்ன பழக்கம் இது பாதி சாப்பாட்ல எந்திரிக்கறது, சாப்டு" என வரவழைத்து கொண்ட கண்டிப்புடன் மகாதேவன் கூற, அன்னையை முறைத்தவாறே விரைவாய் உணவை முடித்து சத்தமின்றி வெளியேறினான் 

"ஏங்க இவன் இப்படி இருக்கான், எப்பதான் உங்க பாசத்த புரிஞ்சுக்க போறானோ?" என்ற சுகந்தியின் வேதனை தன்னையும் தாக்க

"விடும்மா, என்னமோ புதுசா அவன் பேசற மாதிரி" என சமாளித்தார் 

"அவன் பேசினத கேட்டீங்களா? வீட்ட நரகங்கறான், மனசே தாங்கலப்பா" எனவும்  

மனைவியின் கவனத்தை மாற்ற எண்ணி "சுகி, போன் அடிக்கற மாதிரி இருக்கு பாரு" என பேச்சை திசை திருப்பினார்  
​​​​​ 


"ஹாய்  சரண் " என்றபடி வந்த குமரனை  

"இதான் நீ நேரத்துல வர்ற லட்சணமா?" என முறைத்தாள் சரண்யா 

"அது..." என்றவனை பேச விடாமல் "அலைபாயுதே படத்துல கல்யாணத்துக்கு அப்புறம் தான் ஷாலினி வெயிட் பண்ணுவா, நான் இப்பவே உனக்கு வெயிட் பண்ணிட்டு  இருக்கேன்" என்றாள் கோபமாய் 

"அப்போ என்னை மாதவன்னு சொல்ற" என கண்சிமிட்டி சிரிக்க 

"இல்ல, என்னை ஷாலினினு சொல்றேன்" 

"அதை நீயே சொன்னா எப்படி?" என வம்பிழுத்தான் 

"ஓஹோ, அப்போ எவ ஷாலினி மாதிரி இருக்காளோ அவளையே லவ் பண்ணு" என எழப்போனவளை கைபற்றி அமர்த்தியவன் 

"ஓகே ஓகே நோ டென்ஷன், என்னமோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னியே என்ன?" என பேச்சை மாற்றினான் 

"வீட்ல நம்ம மேட்டர் தெரிஞ்சுடுச்சு. எங்க மாமா நம்ம ரெண்டு பேரையும் லாஸ்ட் வீக் மாயாஜால்ல பாத்திருக்காரு"

"போய் போட்டு குடுத்துட்டானா அந்தாளு"

"ப்ச்... விடு. என்னைக்கி இருந்தாலும் தெரிய வேண்டியது தானே, எனக்கு சொல்ற கஷ்டம் மிச்சம்"

"ம்ம்...அதுவும் சரிதான். உங்கப்பா என்ன சொன்னாரு?"

"உன்னை இன்னைக்கி சாயங்காலம் வீட்டுக்கு கூட்டிட்டு வரச்சொன்னாரு"

"இன்னைக்கேவா?"

"ம்"

"அது சரி, போன வாரமே உங்க மாமா நம்மள மாயாஜால்ல பாத்து போட்டு குடுத்துட்டாருனு சொன்ன, ஏன் இவ்ளோ நாள் கழிச்சு உங்கப்பா உன்கிட்ட பேசினாரு. உங்க பேமிலியே டியூப் லைட்டா?" என இன்னொரு சண்டைக்கு வித்திட, அதற்கு சரண்யாவிடமிருந்து சில பல அடிகளை பரிசாய் பெற்றான் 

அந்த ஒரு வார அவகாசதிற்கான காரணம் தன்னை நிலைகுலைய செய்ய போவதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை 


"வாங்க ... உக்காருங்க" என்றவர் "சந்திரா " என உள்நோக்கி குரல் கொடுத்தார் சரண்யாவின் தந்தை ரங்கநாதன். சரண்யாவை முறைத்தபடி வந்த அவள் அன்னை, மௌனமாய் கணவன் அருகில் அமர்ந்தார் 

யோசனையுடன் சோபாவில் அமர்ந்த குமரனின் அருகில் சரண்யா அமரப்போக "சரண்யா, நீ போய் காபி எடுத்துட்டு வா" எனவும் 

"இல்ல...." என்ற குமரனை பேசவிடாமல் "சரண்யா..." என்றார் அதட்டலாய், தனக்கே தன் மகளிடம் உரிமை அதிகம் என குமரன் முன் நிரூபிக்க முனைந்தவர் போல். அதற்குப்பின் ஒரு நொடி கூட அவள் அங்கு நிற்கவில்லை 

காபி சம்பிரதாயமெல்லாம் முடிந்தபின் "மிஸ்டர்.குமரன்" என ரங்கநாதன் ஆரம்பிக்க 

"சும்மா குமார்னே சொல்லுங்க, நோ பார்மாலிடிஸ்" என்றான் குமரன் மரியாதையாய் 

அதை சற்றும் மதியாதவராய் "எங்களுக்கு பார்மாலிடிஸ் ரெம்ப முக்கியம்" என்றார் உள்ளர்த்தத்துடன் 

குமரன் புரியாமல் சரண்யாவை பார்க்க "அப்பா..." என சரண்யா ஏதோ சொல்ல வர 

"நான் இவர்கிட்ட பேசணும்னு தான் கூட்டிட்டு வர சொன்னேன், நீயும் நானும் பேசிக்கறதுக்கு இல்ல" என்றார் கோபமாய் 

"மிஸ்டர் குமரன், என்ன படிச்சு இருக்கீங்க?"  சரண்யா எல்லாம் சொல்லி இருந்தபோதும் வேண்டுமென்றே கேட்டார் 

"எம்.டெக்"

"எந்த ப்ராஞ்ச்?"

"ஐ.டி"

"எந்த காலேஜ்?"

"எம்.ஐ.டி"

"எவ்ளோ பெர்சண்டேஜ் வாங்கினீங்க?" எனவும் 

"உங்கப்பா எனக்கு பொண்ணு குடுக்க போறாரா இல்ல வேலை போட்டு குடுக்க போறாரா?" என கண்களாலேயே கேள்வியுடன் சரண்யாவை முறைத்தான் 

அவள் "பதில் சொல்லு" என பார்வையிலேயே கெஞ்சினாள் 

"92%" என்றான் குமரன் பொறுமையை இழுத்து பிடித்தபடி 

"எங்க சரண்யா யூனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட், தெரியுமா?" என்றார் பெருமையாய் 

"தெரியும்"

"நீங்க ஏன் கோல்ட் மெடல் வாங்கல?" என்றவரை "லூசாயா நீ?" என்பது போல் பார்த்தான் குமரன் 

"மிஸ்டர் குமரன்..." என ஆரம்பிக்க "ஹ்ம்ம்.. இனி ஹைட் வெயிட் எல்லாம் கேப்பானோ" என பீதியுடன் குமரன் விழிக்க

அவன் நம்பிக்கையை சற்றும் குலைக்காமல் "நீங்க என்ன வெயிட் இருக்கீங்க?" என்றார். அதற்கு குமரன் பதில் சொல்லும் முன்பே "ஏன் கேக்கறேன்னா, இப்பெல்லாம் ஓபிசிட்டினால  தான் சின்ன வயசுல நெறைய பேருக்கு ஹார்ட் அட்டேக் வருது" என்றார் 

"உன்னை மாதிரி நாலு பேர், இல்ல இல்ல ஒரே ஒரு ஆள், ஊருக்கு ஒருத்தன் இருந்தா போதும், எல்லாருக்கும் ஹார்ட் அட்டேக் வந்துரும்" என நினைத்ததை வெளியே சொல்ல இயலாமல் "இல்ல சார், நான் ஹைட்க்கு ஏத்த வெயிட் தான் இருக்கேன்" என்றான் பல்லை கடித்தபடி 

அதே நேரம், திட்டம் போட்டு தன்னை மாட்டி விட்டவளை கண்களாலேயே எரித்தான். சரண்யா அதை காணாத பாவனையில் பெற்றவரை பார்த்தாள். "வெளிய வாடி கவனிச்சுக்கறேன்" என மனதிற்குள் கறுவினான் 

அதை தொடர்ந்து வேலை, சம்பளம், மதம், இனம், மொழி, குலம், கோத்திரம், இரத்த வகை, பிறந்த தேதி, நட்சத்திரம், ராசி, பிறந்த நேரம், பிறந்த ஆஸ்பத்திரி முதல் கொண்டு எல்லாம் கேட்கப்பட்டது. குமரனும் தன் பொறுமையை இழுத்து பிடித்து பதில் சொன்னான், சரண்யாவை பார்வையால் எரித்து கொண்டே, அவளும் கெஞ்சும் பார்வையால் அவன் கோபத்தை தணிக்க முயன்றாள் 

"சொந்த ஊர் எது?"

"திருநெல்வேலி"

"திருநெல்வேலில எங்க?"

"கல்லிடைகுறிச்சி"

"ஓ... இந்த சரவணன் மீனாட்சி வருமே, அந்த ஊரா?" என சரண்யாவின் அன்னை தான் அறிந்த ஒரே ஒரு விசியத்தை பிரதாபிக்க முயல, அவரை எரித்து விடுவது போல் பார்த்தார் ரங்கநாதன். குமரனுக்கு தான் சிரிப்பை அடக்குவது பெரும்பாடாய் இருந்தது 

"உங்க அம்மா பேரு?"

"சுகந்தி... ஹவுஸ் வொய்ப்" என்றான் அடுத்த கேள்வியை யூகித்து 

"அப்பா பேரு?" எனவும், குமரன் சற்றே தயங்கி 

"மகாதேவன்" என்றான்

"ஐ ஸீ, என்ன பண்றார்?" என்றார் யோசனையுடன் 

"லாயர்" எனறான் 

"உங்கப்பா பேரு மகாதேவன்னு தானே சொன்னீங்க?" என ரங்கநாதன் கேள்வியாய் பார்க்க, பெரிய "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" ஏங்கர் இவரு, ஆர் யு ஸூர், கான்பிடன்ட்னு மொக்க போட்டுக்கிட்டு என மனதிற்குள் சபித்தபடி 

"ஆமா" என்றான் எரிச்சலாய் 

அதன் பின் ரங்கநாதன் கேட்ட கேள்வியும் சொன்ன வார்த்தைகளும் முற்றுபெறும் முன்னே "ஏய்...." என்ற கர்ஜனையுடன் குமரனின் கைகள் ரங்கநாதனின் சட்டை காலரை கொத்தாக பற்றி இருந்தது 

"ஐயோ..." என சரண்யாவின் தாய் அலற 

"குமார், என்ன இது, பிளஸ் விடுங்க?" என சரண்யா பதறினாள் 

"ஹ்ம்ம்... உண்மைய சொன்னா கோபம் வருதோ? விஷயம் தெரிஞ்ச இந்த ஒரு வாரத்துல உன்னை பத்தி எல்லாமும் விசாரிச்சுட்டேன். நான் சொன்னது பொய்னு ப்ரூவ் பண்ணு, அடுத்த முஹுர்தத்துல என் பொண்ண கல்யாணம் பண்ணி தரேன்" எனவும், அந்த வார்த்தை முற்று பெரும் முன்னே குமரன் வெளியேறியிருந்தான் 

"என்னங்க, எனக்கு ரெம்ப பயமா இருக்கு. இவன இன்னும் காணோமே, மணி பதினொண்ணு ஆச்சு, மறுபடி போன் பண்ணி பாருங்களேன்" என சுகந்தி கண்ணீர் குரலில் புலம்ப 

"போன் ஸ்விட்ச் ஆப்னு வருது சுகி, எதாச்சும் வேலையா இருக்கும், நீ டென்சன் ஆகாத"  என்றார் தன் கலக்கத்தை மறைத்தபடி. அவர் அறிந்த குமரனின் நண்பர்களுக்கு அழைத்து விசாரித்து ஓய்ந்தார். அழுகையும் சமாதானமுமாய் மேலும் இரண்டு மணி நேரம் ஓட, குமரனின் பைக் சத்தம் கேட்க, சுகந்தி ஓட்டமாய் சென்று  கதவை திறந்தார் 

குமரன் வண்டியை நிறுத்தும் முன்னே "கண்ணா..." என ஓடினாள், அவளை இடிப்பது போல் வண்டி அருகில் வர 

"டேய் பாத்து, இத்தனைக்கு உங்கம்மா மேல இடிச்சுருப்ப" என மகாதேவன் பதற 

"ஏன் இவ்ளோ லேட், ஒரு போன் பண்ண மாட்டியா? எங்க போ..." என சுகந்தி பேசிக்கொண்டே போக  "ஸ்டாப் இட், ரெம்ப அக்கறை இருக்கற மாதிரி யாரும் நடிக்க வேண்டாம்" என எரிச்சலாய்  மொழிந்தவன், அதிர்ந்து நின்ற சுகந்தியை தவிர்த்து வேகமாய் உள்ளே சென்றான் 

"உள்ள நட சுகந்தி, போய் தோசை ஊத்து, அவன பாத்தா சாப்ட மாதிரி தெரில" எனவும், சுகந்திக்கு  மற்றது மறந்து பிள்ளையின் பசியே பிரதானமானது 

அதற்குள் குமரன் அறைக்குள் நுழைய "குமார், அம்மா டிபன் ரெடி பண்றா, சாப்டுட்டு படு" எனவும், அதை சட்டை செய்யாமல் அவன் கதவை தாளிட போக "உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன்" என மகாதேவன் மறிக்க 

"நான் என்ன பண்ணனும்னு சொல்றதுக்கு நீங்க யாரு?" என முதல் முறையாய் முகத்திற்கு நேராய் எதிர்ப்பு காட்டினான் குமரன். இன்று குமரனின் மனதை பாதிக்கும்படி ஏதோ நடந்திருக்கிறது என யூகித்தார் மகாதேவன்

மகாதேவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, அதற்குள் சுகந்தி "குமரா, என்ன பேச்சு இது, அப்பாகிட்ட மன்னிப்பு கேளு" என கண்டிப்புடன் கூற, எப்போதும் தன் நலனை மட்டுமே யோசிக்கும் தன்  தாயின் கோபம் குமரனை நிதானம் இழக்க செய்தது 

"அப்பாவா? யாரு யாருக்கு அப்பா?" 

"டேய்..." என சுகந்தி அதிர 

"நான் வீட்டை விட்டு போறேன்" என பொதுவாய் அறிவித்துவிட்டு தன் உடமைகளை சேகரிக்க ஆரம்பிக்க, செயலற்று நின்று விட்டாள் சுகந்தி 

"என்ன நடந்தது?" என்ற மகாதேவனின் கேள்விக்கு பதிலின்றி தன் துணிகளை அடுக்கி கொண்டிருந்தான் குமரன் 

பொறுமையிழந்த மகாதேவன் அவன் கையில் இருந்த பொருளை பிடுங்கியவர் "என்ன நடந்ததுனு கேக்கறேன்ல" எனவும்

"உங்க பொண்ண விரும்பறேன், எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்கனு கேட்டதுக்கு, ஓடுகாலி பெத்த புள்ளைக்கு பொண்ணு குடுக்க முடியாதுனு கழுத்த புடிச்சு வெளிய தள்ளிட்டாங்க, போதுமா?" எனவும், மற்ற இருவரும் ஒருகணம் திகைத்து நின்றனர் 

முதலில் சுதாரித்த மகாதேவன்  "எவன் அப்படி சொன்னான்? சொன்னவன் கைய கால ஒடைச்சுட்டு வந்திருந்தா என் வளர்ப்பு சோட போகலனு சந்தோசபட்டிருப்பேன்" எனவும் 

"சொன்னது பொய்யா இருந்திருந்தா நானும் அதத்தான் செஞ்சுருப்பேன்" என்றவனின் வார்த்தையில் சுகந்தி உடைந்து போனாள் 

மனைவியின் வேதனை தன்னையும் தாக்க "டேய்... யார்கிட்ட என்ன வார்த்த பேசற?" என மகாதேவன் சீற 

"யார்கிட்டயா? பழைய லவ்வர் கிடைக்கனுங்கரதுக்காக, வக்கீல் பவர யூஸ் பண்ணி, எங்கப்பாவ பொய் கேஸ்ல உள்ள தள்ளி, எங்கம்மாவ ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்ட ஒரு தேர்ட் ரேட் கிரிமினல்  மிஸ்டர். மகாதேவன்கிட்ட பேசறேன்" என குமரன் சொல்லி முடித்த நொடி, சுகந்தியின் கைகள் குமரனின் கன்னத்தில் பதிந்திருந்தது 

பிறந்தது முதல் அன்னையின் அணைப்பை மட்டுமே அறிந்த குமரனுக்கு அந்த அடி பேரிடியாய் இருந்தது. தன் கோபம் மொத்தத்தையும் மகாதேவன் மேல் திருப்பினான்  

"இப்ப உங்களுக்கு திருப்தியா? மொதல்ல எங்கப்பாவ என்கிட்ட இருந்து பிரிச்சீங்க, இப்ப என் அம்மாவை எனக்கு எதிரா திருப்பியாச்சு. இதுக்குதான இவ்ளோ நாள் காத்துட்டு இருந்தீங்க, சந்தோசமா இருங்க. குட் பை" என குமரன் வெளியேற 

"நில்லுடா" என சுகந்தியின் அலறலில், தன்னையும் அறியாமல் குமரனின் கால்கள் நின்றன 

"நீ தாராளமா போ, நான் உன்னை இனி தடுக்க போறதில்ல. அதுக்கு முன்னாடி சில உன்மைகள தெரிஞ்சுக்கோ" 

"என்ன சுகந்தி இது? அவன் தான் ஏதோ கோவத்துல பேசறான்னா, நீயும்..." என்றவரை "இல்லங்க, அவன் இவ்ளோ தூரம் பேசினப்புறம் நானும் பேசி தான் ஆகணும்" என்றவள் 

"உன்னோட ஒம்பது வயசுல நான் இவர ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டது மட்டும் தான் உனக்கு தெரியும். அதுக்கு காரணம் என்னனு தெரியுமா? அடி ஓத சூடுனு எல்லா கொடுமையையும் பொறுத்துகிட்டு பத்து வருஷம் உங்கப்பாவோட குடும்பம் நடத்தினேன். வேல வெட்டி எதுவும் இல்லாம நான் சம்பாரிச்ச பணத்தையும் சேத்து குடிச்சு அழிச்சுட்டு வந்தான். ஒருநாள் குடிக்க காசு இல்லைனு சொன்னதுக்கு, உன்னை கடத்தி வெச்சுட்டு, பணம் குடுக்கலேனா கொன்னுடுவேன்னு மெரட்டினான் அந்த மிருகம்" என்றவள், அந்த நாள் நினைவின் தாக்கத்தில் தொய்ந்து போய் அமர, குமரன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்  

"சுகிம்மா... வேண்டாண்டா. எதுக்கு பழசெல்லாம் பேசி..." என மகாதேவன் தடுக்க

"இல்லைங்க, இவனுக்கு எல்லாம் தெரியனும்" என்றவள் "அன்னைக்கி வேற எந்த வழியும் தெரியாம, நான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடுக்க போனப்ப தான் ரெம்ப வருசத்துக்கப்புறம் இவர சந்திச்சேன்" என மகாதேவனை கை காட்டினாள் 

"ஆமா, உங்கப்பாவ கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி இவர நான் விரும்பினது நிஜம் தான். எங்க அண்ணனோட வறட்டு கௌரவத்தால எங்க காதல் செத்து போச்சு. விதிச்சது இதான்னு நானும் ஏத்துகிட்டேன். ஆனா உன்னை பணயம் வெச்சு உங்கப்பா காசு கேட்டப்ப எல்லாமே வெறுத்து போச்சு" என அழுதாள் 

"இவர் தன்னோட வக்கீல் பவர மட்டுமில்ல, தன்னோட உயிர பணயம் வெச்சு உன்னை காப்பாத்தினாரு. உன்மேல படவேண்டிய கத்திய இவர் தாங்கினாரு. கொலை பண்ணிடோமோங்கற பயத்துல உங்கப்பா ஓடிட்டாரு. ஒரு மாசம் ஹாஸ்பிடல்ல இருந்து மறுஜென்மம் எடுத்து வந்தாரு" இதை கேட்ட குமரன், குற்ற உணர்வுடன் மகாதேவனை பார்த்தான் 

"அதுக்கப்புறம் கொஞ்ச நாள் தலைகாட்டாம இருந்த அந்த மிருகம் மறுபடி வந்தது. என்னையும் இவரையும் பத்தி தப்புதப்பா பேசி ஊரார் முன்னாடி கேவலப்படுத்தினான். அதோட நீ அவனுக்கு பொறக்கவே இல்லைனு..." என அதற்கு மேல் பேச இயலாமல் சுகந்தி அழுதாள் 

அதற்குள் அவளை நெருங்கிய மகாதேவன், ஆதரவாய் மனைவியை தோளில் சாய்த்து கொண்டார், சற்று ஆசுவாசப்பட்டவள், மீண்டும் தொடர்ந்தாள் 

"அதே நேரம் இவர் அங்க வந்தாரு. அந்தாளு பேசின வார்த்தைகள தாங்க முடியாம, ஆமா குமரன் எனக்கும் சுகந்திக்கும் பொறந்தவன் தான், இனி என் பிள்ளையா என்கிட்ட தான் வளருவான்னு சொல்லி நம்மள கூட்டிட்டு வந்துட்டாரு. அதோட அந்த பாவி அடங்கல,  என்னை பழி வாங்கறதுக்காக, மறுநாள் தனக்கு தெரிஞ்ச ரௌடிங்க மூலமா உன்னை ஸ்கூல் வாசல்ல வெச்சு கொலை செய்ய பாத்தான்" என அந்த அதிர்ச்சி இன்னும் தன்னை தாக்க பெருமூச்சுடன் நிறுத்தினாள் 

தன்னை மீறிய குமரனின் "ம்மா..." என்ற அழைப்பே காதில் விழாதது போல் தொடர்ந்தாள் 

"அந்தாள் வெளிய இருந்தா உனக்கு ஆபத்துனு, வேற வழியில்லாம, தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் மூலமா கஞ்சா கேஸ்ல உள்ள தள்ளினோம். அதுக்கப்புறம் தான் நம்ம பாதுகாப்புக்காக மறுகல்யாணம் பண்ணிக்க சொல்லி இவர் கேட்டாரு. நான் ஏத்துக்கல, எனக்கு என் புள்ள போதும்னு சொன்னேன். எனக்கும் இவன் தான் புள்ள, இன்னொரு கொழந்த வேண்டாம்னு மறுநாளே போய் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிட்டு வந்து நின்னப்ப, என்னால மறுக்க முடியல. உன்னோட எதிர்காலமும் என்னோட முடிவுக்கு ஒரு காரணம். இப்ப சொல்லுடா? நான் செஞ்சது தப்பா? இவராடா கிரிமினல்?" என சற்றுமுன் இருந்த நெகிழ்வுத்தன்மை மாறி கோபமாய் வினவினாள் 

குமரனுக்கு உலகமே ஸ்தம்பித்து நின்றது போல் ஆனது. எத்தனை பெரிய தியாகம் இது. எந்த ஆணுக்கும் என் வாரிசு, என் ரெத்தம் என கைகாட்டுவது எத்தனை பெருமை அளிக்கும் விஷயம். அதை ஒருவர் விட்டு தருவதென்றால் அவர் எவ்வளவு பெரிய மனம் படைத்தவராய் இருக்க வேண்டும். தாய் பாசம் தான் உலகில் பெரியது என்பதை இங்கு ஒருவர் பொய்யாக்கி விட்டாரே. பெற்றால் தான் பிள்ளையா, இவன் என் பிள்ளை என தன்னை வரித்து கொண்டவரை பார்த்தவன் "அப்பா......" என்ற கதறலுடன் மகாதேவனின் காலில் விழுந்தான் 

சிறுவயது முதலே நடந்ததை சரியாய் அறிந்து கொள்ளாமல் தன்னிடம் ஒரு விலகலுடனே  இருந்த மகன், முதல் முறையாய் மனதார "அப்பா" என்றழைத்ததில் மகாதேவனின் கண்கள் பனித்தது 

"குமார்... எந்திரிப்பா, ப்ச்... அழாத"

"இல்லப்பா, சாரிப்பா... எனக்கு...எனக்கு எப்படி..." 

"ஸ்ஸ் ...சும்மாரு. எனக்கு உன்மேல எந்த கோபமும் இல்ல"

"இதெல்லாம் ஏம்ப்பா என்கிட்டே மொதலே சொல்லல, உங்கள புரிஞ்சுக்காம எவ்ளோ வருசத்த வீணடிச்சுட்டேம்பா" என வருந்தவும்  

"எவ்ளோ மோசமானவனா இருந்தாலும் அவர் உன் அப்பா, அவர பத்தி தப்பா உன்கிட்ட சொல்ல மனசு வரல" என மகாதேவன் கூறவும் 

"யு ஆர் கிரேட் பா. உங்க புள்ளயாவே நான் பொறந்திருக்க கூடாதானு பீல் பண்றேம்ப்பா" என ஏக்கமாய் கூறவும் 

"என்னை பொறுத்த வரைக்கும் நீ எனக்கு பொறந்த புள்ளதான் ராஜா" எனவும் 

"எஸ்...அயம் ப்ரௌட் டு சே அயம் எம்.குமரன் S/O மகாதேவன்" என பெருமையாய் கூறியவன், தந்தையை அணைத்துக்கொண்டான் 

இருவருக்கும் நடந்த பாசப்பரிமாற்றத்தை கண்டு, கண்பனிக்க நின்றிருந்த மனைவியை பார்த்தவர், மகனிடம் ஜாடை காட்டினார் 

"அம்மா...." என அழைத்தபடி குமரன் அருகில் செல்ல, மகன் சற்றுமுன் பேசிய வார்த்தைகளின் நினைவில் முகம் திருப்பினாள் சுகந்தி 

"ம்மா... சாரிமா, நான் ஏதோ கோபத்துல...ப்ளீஸ்மா.." என சிறுபிள்ளையாய் கெஞ்சும் மகனை கண்டதும் சுகந்தியின் மனம் உருகியது, இருந்தும் அதை வெளிக்காட்டாமல்  

"என்னங்க, யாரோ வீட்டை விட்டுபோறேன்னு சொன்னாங்க, சீக்கரம் போகச்சொல்லுங்க, நான் பூட்டிட்டு தூங்கனும்" என பிகுசெய்ய

"சுகி... ஏன் அவன டென்சன் பண்ற" என மகாதேவன் பரிந்து கொண்டு வர 

"அவன் என்னை எவ்ளோ டென்சன் பண்ணினான்" என சுகந்தி பொய் கோபம் காட்ட 

அது புரிந்தவராய் "அப்படியா? என்ன பனிஷ்மெண்ட் தரலாம். ஹ்ம்ம்...இந்த ஐடியா ஓகேவானு பாரு. அவன் லவ் பண்ற பொண்ணையே கல்யாணம் பண்ணி வெச்சு, தினமும் அவன டார்ச்சர் பண்ணனும்னு மருமகளுக்கு ஆர்டர் போட்டுடலாம்" என சிரித்தார் 

"அப்பா..அது... சரண்யா வீட்ல...." என குமரன் இழுக்க

"எல்லாம் நான் பாத்துக்கறேன், டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி" என மகாதேவன் கட்டை விரலை உயர்த்தி காட்ட 

"டேய்... பேரு சரண்யாவா, போட்டோ காட்டுடா" என சுகந்தி சண்டை மறந்து ஆர்வமாய் கேட்க 

"அப்பா, யாரோ என்னை வீட்டை விட்டு போக சொன்னாங்க, நான் போறேன்" என குமரன் கண்சிமிட்ட "அடிங்க..." என சுகந்தி அவனை அடிக்க துரத்த அங்கே குடும்பம் ஒரு அழகிய கதம்பமாய் அரங்கேறியது 

(முற்றும்)