Thursday 16 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 47

Rate this posting:
{[['']]}

‘ஹேப்பி பர்த்டே டாடி!’



அதிகாலையில் குயில் கூவுகிறதோ இல்லையோ,வீட்டு குக்கர் சத்தத்தில் தான் அகில் எழுவதே,கண்ணை திறக்காமல் கொஞ்ச நேரம், அப்புறம் திரும்பி புரண்டு பின் புறத்தை மட்டும் தூக்கி முகத்தை கீழேவைத்து கோயிலில் கும்பிடு போடுவது மாதிரி கொஞ்ச நேரம், அப்புறம்சடனே முதுகு பிடித்த சதிலீலாவதி ரமேஷ் மாதிரி சைடு வாக்கில்

லேன்ட் ஆகி கொஞ்ச நேரம் என மணி ஏழை தொட்டு விடும் ,

பிறகு பல் தேய்த்து,குளித்து யுனிபார்ம் மாட்டி,பிரேக்வாஸ்ட் ஊட்டி,

டாமி யிடம் இருந்து ஷூ வை பிடுங்கி,இரவோடு இரவாய் காணாமல் போன சாக்ஸை கண்டு பிடித்து, இரண்டையும் மாட்டி ,ஸ்கூல் பையை அகில் தூக்க அவனை இவள் தூக்கி மூச்சிரைக்க போய் ஸ்கூல் வேனில் ஏற்றி அனுப்புவதற்குள் லீலாவிற்கு10 கிலோமீட்டர் ஓடி கரைய வேண்டி கலோரி அனைத்தும் ஓடாமலே கரைந்து விடும்.

ஆனால் இன்னைக்கு என்ன அதிசயம் , அழகர் அவரா ஆத்தில இறங்கின மாதிரி, அகிலே பாத்ரூமில் பல் துலக்கி கொண்டு இருந்தான்.

சோம்பல் முகத்துடன் எழுந்து வந்த கணவன் விஸ்வா தேதியை கிழித்த வாறே திரும்பி பார்த்து கேட்டான்..

“என்னடா இன்னிக்கு நீயே எழுந்துட்ட , என்ன ஸ்பெஷல் ?”

அகில் எதுவும் பேசாமல் சிரித்தான் !.

"அடங்கப்பா, காலையில ஆறு மணிக்கு சிரிக்கிறியே !என்ன அதிசயம்!'

என்று கேட்ட விஸ்வாவிடம்

"ஹ்ம்ம், வேறன்ன அதிசயம் , உங்க பிறந்த நாளன்னிக்கு உங்களை கண் கலங்க வைக்க வேண்டாமே நினைச்சுருப்பான்..இல்லையா!”

சொல்லி கொண்டே கையை நீட்டினாள் லீலா ..

"ஹேப்பி பர்த்டே ன்க"

"தேன்க் யு டியர் !"

“அப்பாக்கு இன்னிக்கு பர்த் டே தங்கம் ..விஷ் பண்லாமா ?”,லீலாவின் கேள்விக்கு அமைதியாக சிரித்தான் அகில்.

“என்னடா சிரிக்கிற ...விஷ் பண்லாம் வா ?!”

இப்பொழுது மொத்தமாக முதுகு காட்டி பல் துலக்க ஆரம்பித்தான்,

லீலா விற்கு குழப்பமாக இருந்தது.

“அட., அவனுக்கு இப்ப மூடு இல்ல விடு”, விஸ்வா வின் சமாளிப்பை கேட்டு கொண்டே மீண்டும் சமையில் அறையில் நுழைந்தாள்.

இருந்தாலும் அவமானத்தை களைவது தானே அப்பனுக்கு அழகு , மீண்டும் ஒரு முறை விஸ்வா முயற்சித்தான்.

"அகில் குட்டி ,அப்பாவும் நீயும் சேர்ந்து பல் விளக்கலாமா ?"

“நோ !!” என்று அகில் கத்தியதில் தூங்கி கொண்டு இருந்த டாமி

தெறித்து எழுந்து, வாலை ஆட்டியது!.

"என்ன இவன் பிரச்சனை , என்று குழம்பியவாறே நின்றவனிடம் ,

லீலாவின் கேள்வி மேலும் எரிச்சலூட்டியது.

"இன்னிக்கு உங்க ராசிக்கு என்னன்னு போட்ருக்கு ?"

"ஹ்ம்ம்ம்ம் .. சம்திங் ராங் னு போட்ருக்கு”, சொல்லி கொண்டே தீப்பெட்டியை எடுத்து கொண்டு மாடிப்படி ஏறினான்.

“சரி, சாயங்காலம் பார்டிக்கு உங்க ஆபிஸ் பிரண்ட்ஸ் எத்தனை பேர்

வராங்க ?”

“எப்படியும் 20 பேராவது வருவாங்க லீலா ,சாப்பாடு வெளிய ஆர்டர் பண்ணிட்டேன் “என்றான் விஸ்வா.

அகிலின் முகம் பிரகாசித்தது..இது தான் திட்டத்தை செயல் படுத்த

சரியான நாள் என்று மனது சொல்லியது!.

இடம் : தெரு முனை மளிகை கடை , மாலை 5 மணி

"அது ஒரு பாக்கட் கொடுங்க!" ,

வெறும் சத்தம் மட்டும் வருவதை கேட்ட மளிகை கடைகாரர் , குழப்பத்துடன் எட்டி கீழே பார்த்தார் .

அங்கே அகில் தன நண்பன் பரத் தோடு நின்று கொண்டு இருந்தான்,.

ஆச்சர்யப்பட்ட கடைகாரர் ,

“என்ன கேட்டே?” என மறுபடி வினவினார்.

"அதோ , அது ஒரு பாக்கட் கொடுங்க? "

“எது”..என்று கை நீட்டிய திசையில் திரும்பி பார்த்த கடைகாரர் , அதிர்ச்சியில் உறைந்தே போனார்.

“ஏன்டா கண்ணுகளா , முளைச்சு மூணு இலை விடுல ,அதுக்குள்ள அது கேக்குதா , அடி ..ஓடுங்கடா வூட்டுக்கு”என்று விரட்டினார் .

“இல்லை , பிளிஸ் , அது வேணும் பிளிஸ்” என்று அடம் பிடித்தான்

அகில்.

“யேய்,பாருங்கடா..காலைலேயே கடுப்பேதாதீங்க.,ஓடிடுங்க!”

என்றவரிடம்,அங்கிள் ,

“ஒரு நிமிஷம் இங்க வாங்க” என்று கூப்பிட்டு அவர் காதில்

கிசுகிசுத்தான் பரத் ,அதை கேட்டு ஆச்சர்ய பட்டவர்! ,

"நல்ல பசங்க டா நீங்க , பாத்த இத்தனூண்டு இருந்துட்டு எத்தனை

பிளான் பண்றீங்க , போற வழில எங்கியும் கீழ போட்டு

மாட்டிக்காதீங்க டா”..என்று சிரித்தவாறே அகில் கேட்டதை எடுத்து

பேக் செய்து கொடுத்தார் .

வீட்டுக்குள் பரத்துடன் அகில் நுழையும் போதே அப்பாவின் அலுவலக நண்பர்கள் எல்லாரும் ஹாலில் நின்று கொண்டு இருந்தார்கள்..

நட்ட நடுவில் ஒரு கேக் ஹாப்பி பர்த்டே விஸ்வா என எழுதப்பட்டு இருந்தது..

“வா பரத் வா ..அம்மா நல்லாருக்காங்களா ?”என்று கேட்டு கொண்டே , “ஏங்க , இது தான் அந்த பையன் ,சொன்னேனே இவங்க அப்பா

போன மாசம் இறந்துட்டார்னு”..என விஸ்வாவிடம் கிசுகிசுத்தாள் லீலா.

“அகில் , பரத்க்கு என்ன வேணுமோ கேட்டு கொடு!,.

பரத் என்ன வேணும்னாலும் கேளு ..சரியா” என வாஞ்சையுடன் சொன்னான் விஸ்வா.

இந்த வயதில் அப்பா இல்லாமல் எவ்வளவு கஷ்டபடுவான் ,

பாவம் என மனதிற்குள் நினைத்து வருந்திய விஸ்வாவை,

"ஹே , கேக் கட் பண்ணலாம் விஸ்வா " என்ற நண்பரின் குரல்

அழைத்தது.

எல்லாரும் ஒரு சேர ஹேப்பி பர்த்டே பாட விஸ்வா கேக்கை கட் செய்தான் , ஆனால் அகில் மட்டும் பாடவில்லை..

இதை விஸ்வாவும் லீலாவும் கவனித்தாலும் , கேக் வெட்டியவுடன்

முதல் துண்டை அகிலுக்கு கொடுத்தனர் ..

வாங்க மறுத்து தலையாட்டிய அகில் , தான் அதுவரை மறைத்து வைத்துஇருந்த , வண்ண காகிதத்தால் சுற்ற பட்டு இருந்த பாக்கட் டை எடுத்து நீட்டினான் ,

“என்னடா அப்பாக்கு கிப்ட் டா ?”என்று சின்ன அதிர்ச்சியும்

ஆச்சர்யமுமாய் கிப்டை வாங்கி பிரித்தான் விஸ்வா ..

பிரித்தவுடன் அதில் இருந்ததை பார்த்து மொத்த நண்பர் கூட்டமும்.

“ஓ மை காட்!” என்று அதிர்ச்சியாக ,

விஸ்வா கோபத்தில் அகிலை பார்க்க , விஸ்வா அவமானபடுவதை

பார்த்து செய்வதறியாது நின்றாள் லீலா ..

“என்ன அகில் இது , எங்க வாங்கின இதை?” என்று விஸ்வா கத்த

ஆரம்பிக்கும் பொழுது ,

“டாடி ,ஒரு நிமிஷம்,பிளிஸ் , நான் சொல்றத கேளுங்க”,என்ற அகிலின் கண்களில் கண்ணீர் .

“பரத்துக்கு அவங்க அப்பா னா உயிர் , அவங்க அப்பா தான் டாடி

அவங்களுக்கு எல்லாம் ,ஆனா அவங்க அப்பாக்கு நீங்க இப்ப கையில் வைச்சிருகிறது தான் பிடிக்கும் ,அதை தினமும் குடிச்சு தான் அவன்

அப்பா நோய்வாய்பட்டு இறந்தார் ,அவர் இறந்ததக்கு அப்புறம் பரத் தாலே முதல் மாதிரி படிக்க முடில ,இன்னும் அவன் ஸ்கூல் பீஸ் கட்டலே ,அவங்க அம்மா பணத்துக்கு ரொம்ப கஷ்டபடுறாங்க ,தினமும் அவங்க வீட்ல யாரோ பணம் கேட்டு சண்டை போடறாங்க பா,கிளாஸ் ல பரத் அழுதுட்டே இருப்பான்”

என கண்களில் கண்ணீர் கர கர வென வழிய தேம்பியவாறே அகில்

மேலும் தொடர்ந்தான்.

“எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் டாடி ,அம்மாக்கும் நீங்கன்ன

உயிர்,ஆனா இதோ இதால நீங்களும் பரத் அப்பா மாதிரி இறந்துட்டா..பயமா இருக்கு,நானும் அம்மாவும் நீங்க இல்லாம எப்படி டாடி இருப்போம் ,நீங்க எங்களுக்கு வேணும் டாடி,.பிளிஸ்,,.என் டாடி எனக்கு

வேணும் ,இதை விட்டுடங்க” என விஸ்வாவின் கால்களை கட்டி

கொண்டு கதறினான் அகில்.

என்ன செய்வது என தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்

விஸ்வாவும் லீலாவும் ,நண்பர்கள் விஸ்வாவின் தோளை தொட ,

சுதாரித்து கண்ணை துடைத்து கொண்டே விஸ்வா அகிலை தூக்கி நெஞ்சில் கட்டி அணைத்து கொண்டான்.

விஸ்வாவின் கண்களில் கண்ணீர்,அகில் முகத்தில் முத்தமழை பொழிந்து கொண்டே,

“சாரி டா தங்கம் , எனக்கு நீயும் மம்மியும் தான் முக்கியம் , உனக்காக நான் என்ன வேணா பண்ணுவேன் அகில் , இதை விட மாட்டனா ?

இதுக்கு மேலே டாடி இதை தொடமாட்டேன்..இது சத்தியம்”என்று

அகில் கொடுத்த கிப்டை தூக்கி எறிந்தான்.

அழுது கொண்டே சிரித்த அகில் ,“தேன்க் யு அண்ட் ஹேப்பி பர்த் டே டாடி” என விஸ்வாவின் கழுத்தை கட்டி கொண்டான்.

சுவற்றில் பட்டு,கசங்கி கீழே விழுந்த கிப்டில்

இருந்த சிகரட் பெட்டியில் தெளிவாக எழுதி இருந்தது,

‘புகை பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் , உயிரை கொல்லும்’.